தேவாரம்–சாக்குலூத்து மெட்டு சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையில் கம்பம் தொகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் பேசியதாவது:
கம்பம் தொகுதி இயற்கை மற்றும் விவசாய வளம் நிறைந்த பகுதியாக இருந்தபோதிலும், வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசு சிறப்பு கவனத்துடன் நிறைவேற்ற வேண்டும்.
கம்பத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், வேளாண் கல்லூரி, நர்சிங் கல்லூரி, ஆயுஷ்–சித்தா மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் ராயப்பன்பட்டியை ‘கல்வி கிராமம்’ என அறிவித்து, அங்கு அரசு கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களை அமைக்க வேண்டும். புதிய பேருந்து நிலையமும் அமைக்க வேண்டும்.
ரூ.155 கோடியில் திட்ட மதிப்பீடு
தேவாரம்–சாக்குலூத்து மெட்டு சாலை தமிழகத்தையும் கேரளத்தையும் இணைக்கும் முக்கிய மலைப்பாதையாகும். சுமார் 4 கி.மீ. தொலைவில் கேரளத்தை சென்றடையக்கூடிய இந்தப் பாதையை பல நூற்றாண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 1981-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். இந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். எனினும், பல்வேறு காரணங்களால் திட்டம் நிறைவேறாமல் உள்ளது.
இந்தச் சாலை அமைக்கப்பட்டால் தேனி மாவட்ட மக்களுக்கு கேரளத்துக்கான போக்குவரத்து வசதி மேம்படுவதுடன், கல்வி, மருத்துவம், தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கும் உதவும். தமிழக–கேரள மக்களிடையேயான உறவும் வலுப்படும்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் சுமார் ரூ.155 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றார்.
விவசாயத்துக்கு முக்கியத்துவம்
கம்பம் பள்ளத்தாக்கு விவசாயத்தை மேம்படுத்த சண்முகாநதி–தொட்டமாந்துறை கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். சண்முகாநதி அணையை தூர்வாரி விரிவுபடுத்துவதுடன், தொகுதியில் உள்ள 90 கண்மாய்கள், குளங்களை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
18-ஆம் கால்வாய் பராமரிப்புப் பணிகளை விரைந்து மேற்கொண்டு விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கச் செய்ய வேண்டும். நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள திராட்சை சாகுபடியை மீண்டும் வளர்ச்சியடையச் செய்ய தொட்டமாந்துறை கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
முல்லைப்பெரியாறு
முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அணை நீரில் கலக்கும் கேரள கழிவுநீரை தடுத்து நிறுத்த வேண்டும்.
மேகமலை–வருஷநாடு மலைக்கிராம மக்களின் வன வெளியேற்றத்தை தடுத்து, அவர்களின் வாழ்வியல் உரிமையை பாதுகாக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் சீராய்வு மனுவில் வலுவான வாதங்களை முன்வைத்து அவர்களுக்கு சாதகமான தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சுற்றுலா, மருத்துவ வசதிகள்
மேகமலை, சுருளி அருவி, சின்னசுருளி அருவி, வைகை அணை, லோயர்கேம்ப் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். வைகை அணையில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் வனவியல் பூங்கா அமைக்க வேண்டும்.
கண்ணகி கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் பக்தர்கள் வழிபட அனுமதிப்பதுடன், தமிழகத்தின் வழியாக கோவிலுக்குச் செல்லும் பாதையை அமைக்க வேண்டும்.
கம்பம், சின்னமனூர் அரசு மருத்துவமனைகளை 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்த வேண்டும். தேவாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக மேம்படுத்தி தேவையான மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
கம்பம்–புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும். மதுரை–கம்பம் நான்கு வழிச்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். உத்தமபாளையம் தாலுகாவை இரண்டாகப் பிரித்து கம்பத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும்.
மேலும், கம்பத்தில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் மற்றும் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும். தமிழகத்தில் அமைக்கப்பட உள்ள ஒலிம்பிக் சிறப்பு விளையாட்டு மையங்களில் ஒன்றை கம்பத்தில் அமைக்க வேண்டும் என்றும் ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தினார்.

