தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டிருந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட கடையை மூட முடியாமல் அதிகாரிகள் திணறி வருவது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, திண்டுக்கல் நகரின் முக்கியப் பகுதியான பேருந்து நிலைய வளாகத்திற்குள் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மூடுவதற்கு, அதன் பின்னால் இருக்கும் பெரும் “நிழல் உலக” அரசியல் அழுத்தமே காரணம் என்று சமூக ஆர்வலர்கள் பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடையை ஒட்டி இயங்கி வரும் பாரின் (Bar) உரிமையாளருக்குப் பயந்துதான் அரசு அதிகாரிகள் இதுவரை எந்தவித சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்காமல் கள்ள மௌனம் சாதித்து வருவதாகக் கூறப்படுகிறது.
சமூக ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் வட்டாரங்கள் கசியவிடும் தகவல்களின்படி, இந்த பார் முதலாளி சாதாரணமானவர் அல்ல. கடந்த காலங்களில் தமிழகத்தை ஆட்சி செய்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் ஆட்சிக் காலங்களிலும் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பார்களைத் தனது மறைமுகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் என்று கூறப்படுகிறது.
இவருக்கு அமைச்சர்களை மிஞ்சிய சட்டவிரோத வருமானம்?இந்த நபர் மீது எழுந்துள்ள மிக முக்கியக் குற்றச்சாட்டு என்னவென்றால், கடந்த பல ஆண்டுகளாகப் பார்களை ஏலம் எடுத்தும், பல இடங்களில் ஏலம் எடுக்காமலும், அரசுக்குச் செலுத்த வேண்டிய பல கோடி ரூபாய் உரிமத் தொகை (License Fee) மற்றும் வரியைச் செலுத்தாமல் ஏய்ப்பு செய்து பார்களை நடத்தி வந்துள்ளார் என்பதாகும்.
“இந்த குறிப்பிட்ட நபரின் கடந்த கால டாஸ்மாக் தொழில் வரலாற்றையும், அவரது சொத்து மதிப்புகளையும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) மூலம் முறையான விசாரணைக்கு உட்படுத்தினால், ஒரு மாநில அமைச்சருக்குக் கிடைக்கும் வருவாயை விட, இவர் ஒரு மாவட்டத்தின் டாஸ்மாக் பார்கள் மூலம் மட்டுமே அசுரத்தனமான வருமானத்தை ஈட்டியுள்ளார் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிச்சத்திற்கு வரும்.”
திமுக, அதிமுக என இரு துருவ ஆட்சிகளிலும் சிப்பாய் போலப் பாய்ந்து கல்லா கட்டிய இந்த ‘பார் சாம்ராஜ்யம்’, தற்போதைய தவெக ஆட்சிக் காலத்திலும் தங்களது பண பலத்தால் அதிகாரிகளைத் தங்களுக்குச் சாதகமாக வளைத்துள்ளதாகப் பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர்.
- விதிமீறல்களின் உச்சம்: பேருந்து நிலையத்திற்குள் வரும் பல்லாயிரக்கணக்கான பெண் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இடையூறாக 24 மணி நேரமும் இந்த பார் மற்றும் கடையைச் சுற்றி மதுப்பிரியர்களின் நடமாட்டம் இருப்பதாக தவெக உள்ளூர் நிர்வாகிகளே புகார் வாசித்துள்ளனர்.
- அரசுக்கு எழுந்துள்ள கேள்வி: “ஊழலற்ற தூய்மையான நிர்வாகம்” என்று முழங்கி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், இத்தகைய பழைய அரசியல் பின்புலம் கொண்ட பெரும் முதலாளிகளின் பிடியில் இருந்து அதிகாரிகளை விடுவித்து, திண்டுக்கல் பேருந்து நிலைய கடையை உடனடியாக மூடுவாரா? அல்லது அதிகார வர்க்கம் காட்டும் சமரசங்களுக்குப் பணிந்து போவாரா? என்பதே சமூக ஆர்வலர்களின் தற்போதைய பிரதான கேள்வியாக உள்ளது.
ஏழை எளிய மக்களின் வாக்குகளைப் பெற்றுப் பொறுப்பேற்ற புதிய அரசு, இத்தகைய ‘நிழல் மனிதர்களின்’ பொருளாதார ஆதிக்கத்தை ஒடுக்கி, திண்டுக்கல் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
@all

