ஊரைக்கெடுத்த “பார்”…!
உஷாரான “ஊர்”! – காமாட்சிபுரத்தில் மூடு.. தாதப்பட்டியில் திற…
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் திரண்டு மனு!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மூடப்பட்ட டாஸ்மாக் கடையை, மாற்று கிராமங்களில் திறக்கக் கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
வத்தலகுண்டு ஒன்றியம், ரெங்கப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட காமாட்சிபுரத்தில் கடந்த சில காலத்திற்கு முன்பு டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வந்தது. இக்கடையினால் அப்பகுதி பொதுமக்களுக்குப் பல்வேறு பாதிப்புகளும், இடையூறுகளும் ஏற்பட்டு வந்ததால், அவர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று அந்த டாஸ்மாக் கடை சில காலத்திற்கு முன்பு மூடப்பட்டது.
மாற்று இடத்திற்கு எதிர்ப்பு
இந்நிலையில், மூடப்பட்ட அதே டாஸ்மாக் கடையை தற்போது சந்தையூர் மற்றும் தாதப்பட்டி ஆகிய கிராமப் பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், குடியிருப்புப் பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைந்தால் தங்களின் வாழ்வாதாரமும், பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்
புதிதாகத் திட்டமிடப்பட்டுள்ள இடங்களில் டாஸ்மாக் கடையைத் திறக்கக் கூடாது என வலியுறுத்தி, பி. தங்கபாண்டி என்பவர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் திரண்டு வந்தனர்.
வளாகத்தின் வெளியே தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், பின்னர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தனர். பொதுமக்கள் மற்றும் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என அம்மனுவில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

