திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும், மலைப்பிரதேசமாகவும் விளங்கும் கொடைக்கானலில், அரசு நிர்வாகத்தின் முக்கிய அங்கமாக விளங்குவது கோட்டாட்சியர் (RDO) அலுவலகம் ஆகும். இந்த அலுவலகத்திற்கு நாள்தோறும் பல்வேறு சான்றிதழ்கள், பட்டா மாறுதல் மற்றும் அவசரத் தேவைகளுக்காகப் பொதுமக்கள், விவசாயிகள் எனப் பலரும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக இக்கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாரும் முறையாகப் பணிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அலுவலகம் எந்நேரமும் கேட்பாரற்று, வெறிச்சோடிக் காணப்படுகிறது.
மலைக்கிராமங்களில் இருந்தும், தொலைதூரப் பகுதிகளில் இருந்தும் தங்களது அன்றாடப் பணிகளைப் போட்டுவிட்டு, பல நூறு ரூபாய் செலவு செய்து வரும் பொதுமக்கள், அதிகாரிகள் இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாள் முழுவதும் காத்துக் கிடந்துவிட்டு, இறுதியில் ஏமாற்றத்துடன் வீடு திரும்ப வேண்டிய அவலநிலையே நீடிக்கிறது.
“கடந்த மூன்று மாதங்களாகவே இந்த நிலைதான் நீடிக்கிறது. கேட்க ஆள் இல்லாத அரசு அலுவலகமாக இது மாறிவிட்டது” என்று பொதுமக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
எனவே, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக தலையிட்டு, கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் வருகையை உறுதி செய்ய வேண்டும் என்றும், மக்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

