திராவிட மொழி பெயர்ப்பாளர்கள்ச் சங்கம் (DBTA) மற்றும் ‘தொடல் நுடி’ கன்னடக் குழந்தைகள் இலக்கிய மாத இதழ் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில், பெங்களூர் ஒயிட்பீல்டில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி எஜுகேஷன் டிரஸ்டில் கடந்த 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று “பஞ்ச திராவிடக் கவிஞர் சங்கமம்” மற்றும் ‘தொடல் நுடி’ இதழின் 13-ஆவது ஆண்டு மலர் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் துளு ஆகிய பஞ்ச திராவிட மொழிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு மாநிலங்களிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் கலந்துகொண்டு தங்களது கவிதைகளை வாசித்தனர்.
மொழிகளின் பன்முகத்தன்மையையும் இலக்கிய ஒற்றுமையையும் பறைசாற்றும் விதமாக அமைந்த இக்கவிதைகள் பார்வையாளர்களின் மனதை வெகுவாகக் கவர்ந்தன. பஞ்ச திராவிட மொழிக் கவிஞர்களின் இந்தச் சங்கமம், 'பஞ்சாமிர்தம்' பருகியது போன்ற இனிமையானதொரு நல்அனுபவத்தை வழங்கியது.
DBTA தலைவர் டாக்டர் சுஷ்மா சங்கர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவை, ‘சுட்டுக்கவிதைச் சக்கரவர்த்தி’ என்று புகழ்பெற்ற பிரபல கன்னடக் கவிஞர் எச். துந்திராஜ் தொடங்கி வைத்தார். இலக்கியத்திற்கும் மொழி நல்இணக்கத்திற்கும் புதிய திசையை உருவாக்கும் தளமாக இச்சங்கமம் அமைந்துள்ளது என்று அவர் பாராட்டினார்.

பிரபல தமிழ்க் கவிஞரும், ‘தடாகம்’ இலக்கிய அமைப்பின் நிறுவனருமான டாக்டர் க.வடிவழகி தேவசகாயம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ‘தொடல் நுடி’ மாத இதழின் 13-ஆவது ஆண்டு மலரை DBTA ஆலோசகர் டாக்டர் நா. தாமோதர ஷெட்டி வெளியிட்டு, குழந்தைகளிடம் தாய்மொழிப் பற்றையும் வாசிப்புப் பழக்கத்தையும் வளர்ப்பதில் இவ்விதழின் பங்களிப்பைப் பாராட்டினார்.
முன்னதாக, DBTA செயலாளர் திரு. கே. பிரபாகரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பேராசிரியர் ராகேஷ் வி.எஸ். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, செயற்குழு உறுப்பினர் திரு. ரபின் ரவீந்திரன் ஒருங்கிணைப்புப் பணிகளைச் செவ்வெனச் செய்திருந்தார்.
விழாவில் பல்வேறு திராவிட மொழிக் கவிதைகள் குறித்த ஆய்வுக் கருத்துகளைப் பேராசிரியர்களும் அறிஞர்களும் விரிவாகப் பகிர்ந்து கொண்டனர். தமிழ்: டாக்டர் மலர்விழி, மலையாளம் & கன்னடம்: திருமதி மாயா பி. நாயர்,தெலுங்கு: டாக்டர் மால்யாத்ரி,துளு: டாக்டர் பி.எஸ். சிவகுமார், இவ்விழாவின் தமிழ்ப் பிரிவில் கவிஞர்கள் தீபலோசனி கார்த்திக், நாகம்மாள் நீலகாந்தன், எஸ். வி.ஆர். மூர்த்தி, மா. வித்யா மற்றும் டாக்டர் சரளா புருஷோத்தமன் ஆகியோர் தங்களின் கவிதைகளை வாசித்து இலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்திப் பாராட்டைப் பெற்றனர்.
பல்வேறு திராவிட மொழிக் கவிஞர்களை ஒரே மேடையில் ஒன்றிணைத்த இந்த விழா, வேற்றுமையில் ஒற்றுமையைப் பறைசாற்றுவதுடன், திராவிட மொழிகளுக்கு இடையே பரஸ்பர பாச நல்லுறவையும் இலக்கிய நேசத்தையும் மேன்மேலும் வளர்க்கும் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பதிவாகியுள்ளது எனத் தலைவர் டாக்டர் சுஷ்மா சங்கர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

