பிறப்பு விகிதம் கடுமையாக சரிந்துள்ளதை அடுத்து, அதை அதிகரிக்கும் நோக்கில், குழந்தை பெற்றுக் கொள்வோருக்கு ரூ.55 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும் என்று சிங்கப்பூர் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
உலகளவில் பல நாடுகளில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது தொடர்பான தொடர் நடவடிக்கைகளால், அதன் விகிதம் சரிந்துள்ளது. ஒரு காலத்தில் குடும்பத்துக்கு 4,5 குழந்தைகள் இருந்த நிலை மாறி, இன்று வீட்டுக்கு ஒன்றிரண்டு குழந்தைகள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னதாக பெரும்பாலான நாடுகளில் மக்கள் தொகை சதவீதம் போதுமான அளவில் இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையான மக்கள் தொகை சரிவை சந்தித்து வருகின்றன. அந்த வகையில், சிங்கப்பூரும் மிக கடுமையான பிறப்பு விகித சரிவை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் மக்கள் தொகையை அதிகரிக்க அந்த நாட்டு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி சிங்கப்பூரில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 17 வயது வரை பல்வேறு கட்டணங்களாக 70,000 சிங்கப்பூர் டாலர் வழங்கப்படும் என்று சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு, இந்திய ரூபாயில் சுமார் 55 லட்சம் ஆகும்.
குறைந்து வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை, அந்த நாட்டு பிரதமர் லாரன்ஸ் வாங்க் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில், குழந்தை பிறந்த உடன் கை செலவுக்காக ரூ.7 லட்சம் வழங்கப்படும். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் பெற்றோரின் வங்கி கணக்கில் ரூ.1.25 லட்சம் வரவு வைக்கப்படும்.
இதுதவிர, குழந்தை பராமரிப்பு செலவு குறைப்பு, பெற்றோர்களுக்கு கூடுதல் விடுமுறை, வீடு வாங்குவதற்கான சலுகைகள் உள்ளிட்டவையும் இந்த திட்டத்தில் இடம்பெறும் என்று சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

