பரஸ்பர சம்மதத்துடன் வாழும் வயது வந்த இருவரின் ‘லிவ்-இன்’ உறவு, திருமண உறவுக்கு இணையானது என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வயது வந்த நபர்கள் தங்களுக்குப் பிடித்த வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்து வாழ்வது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்றும், இதில் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் அல்லது சமூகத்தினர் தலையிட உரிமை இல்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
30 வயதைக் கடந்த காதல் ஜோடி ஒன்று, தங்களது லிவ்-இன் உறவுக்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் விடுப்பதாகவும், காவல் பாதுகாப்பு வழங்கக் கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சௌரப் பானர்ஜி அமர்வு, அந்த ஜோடிக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு உத்தரவிட்டது.
மேலும், சாதி, மதம், சமூக நிலை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, வயது வந்தோரின் தனிப்பட்ட முடிவுகளில் தலையிடுவது அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும் என நீதிமன்றம் குறிப்பிட்டது.
சட்டப்பூர்வ திருமணம் நடைபெறாத நிலையிலும், பரஸ்பர சம்மதத்துடன் தொடரும் லிவ்-இன் உறவுகளுக்கு சட்டப் பாதுகாப்பு இருப்பதாகவும், பெண்கள் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

