திருப்பத்தூர் மாவட்டம், நாட்ராம்பள்ளி வட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்தாண்டகுப்பம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சித் தலைவர் இல்லாத நிலையில் அவரது கணவர் தலைமை தாங்கியதாகக் கூறப்படும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
16-வது நிதிக் குழு மானியத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டப் பணிகளைத் தேர்வு செய்வதற்காக, ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை 11 மணியளவில் கூத்தாண்டகுப்பம் ஊராட்சியில் இந்தச் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஊராட்சித் தலைவர் ஜெயலட்சுமி பங்கேற்கவில்லை என்றும், அதற்குப் பதிலாகத் தலைவரின் கணவர் சுரேஷ் தலைமையில் ஊராட்சிச் செயலாளர் அனிதா கூட்டத்தை நடத்தியதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுக்கு முறையான அழைப்பு விடுத்து, மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளின் மேற்பார்வையில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், இம்முறைகள் பின்பற்றப்படாமல், ஊராட்சித் தலைவரின் கணவர் முன்னிலையில் கூட்டம் நடத்தப்பட்டதாகப் புகார்கள் தெரிவிக்கின்றன.
மேலும், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சித் துணைத் தலைவர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அல்லது பொதுமக்கள் யாரும் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட (100 நாள் வேலைத் திட்டம்) பணியாளர்களைக் கொண்டு மட்டுமே கூட்டம் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட ஊராட்சியின் பதிவேடுகளை ஆய்வு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால், ஊராட்சிச் செயலாளர், ஊராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

