மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரபாலபுரத்தில் அமைந்துள்ள பழைமையான காலபைரவர் ஆலயத்தில், ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன.

நாய் வாகனம் இன்றி மேற்கு நோக்கி அமைந்துள்ள இவ்வாலயம், காலபைரவரின் 108 நாமாவளியில் இடம்பெறும் “சேத்திரபாலாய போற்றி” என்ற சிறப்பால் பக்தர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றதாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் காலபைரவரின் சூலாயுதம் கிடைக்கப்பெற்றதால், ஆனந்த காலபைரவராக அருள்பாலிப்பதாகவும், மகாபாரதத்தில் அர்ஜுனன் இத்தலத்தில் வழிபட்டதாகவும் தலபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அதிகாலை முதலே ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. திருமணத் தடை நீங்கவும், நினைத்த காரியங்கள் நிறைவேறவும் வேண்டி ஏராளமான பக்தர்கள் தேங்காய், பூசணிக்காய் மற்றும் பாகற்காயில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
மேலும், பக்தர்கள் ஆலயத்தை 11 முறை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாள் முழுவதும் ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

