நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட பல இந்தியர்கள் காணாமல் போனதாக வெளியான தகவல் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் உள்ள தமிழர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்கள் உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

