அக்டோபர் 1 முதல் புதிய நடைமுறை அமல்: 5-வது பணம் எடுப்புக்கு ரூ.15 + ஜி.எஸ்.டி.
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு (BSBD) வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கான பணம் எடுக்கும் விதிமுறைகளில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதன்படி, BSBD கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்தில் 4 முறை வரை பணம் எடுப்பதற்கு எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. வங்கி கிளை மற்றும் ஏ.டி.எம். மூலம் மேற்கொள்ளப்படும் பணம் எடுக்கும் பரிவர்த்தனைகள் இந்த வரம்பில் கணக்கிடப்படும்.
ஆனால், ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால், 5-வது பரிவர்த்தனை முதல் ஒவ்வொரு பணம் எடுப்புக்கும் ரூ.15 மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி. கட்டணம் வசூலிக்கப்படும் என எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
மேலும், ஆதார் அடிப்படையிலான பணம் எடுக்கும் சேவை (AePS) பரிவர்த்தனைகளும் இனி இலவச பணம் எடுக்கும் வரம்பில் சேர்க்கப்படும். ஏ.டி.எம். அல்லது வங்கி கிளை மூலம் பணம் எடுத்த பின்னர் AePS முறையில் பணம் எடுத்தாலும் அது மாதாந்திர வரம்பில் கணக்கிடப்படும்.
அதே நேரத்தில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு தொடர்ந்து கட்டணம் இல்லை என வங்கி தெரிவித்துள்ளது.
BSBD கணக்கு என்றால் என்ன?
அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு (BSBD) என்பது குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்க வேண்டிய அவசியமில்லாத சேமிப்பு கணக்கு ஆகும். பொதுமக்கள் எளிதாக வங்கி சேவைகளை பெறும் வகையில் இந்த கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
புதிய விதிமுறை அமலுக்கு வருவதால், அடிக்கடி ரொக்கப் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது பணப் பரிவர்த்தனைகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

