தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்த நகைச்சுவை கலந்த கருத்தால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது புதிய அரசியல் சூழல் மற்றும் ஆளும் தரப்பின் செயல்பாடுகள் தொடர்பாக பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எதிர்தரப்பினரின் கருத்துகளுக்கு நகைச்சுவையாக பதிலளித்தார்.
அப்போது அவர், “மேடையில் பேசுவது எளிது. இப்போதுதான் 3 மாதங்கள் ஆகியிருக்கிறது; இனிமேல்தான் உங்களுக்குத் தெரியப்போகிறது” என்று குறிப்பிட்டார்.
அவரது இந்தக் கருத்தைக் கேட்டதும் முதலமைச்சர் உள்ளிட்ட அவையில் இருந்த உறுப்பினர்கள் சிரித்தனர். இதனால் பேரவையில் சிறிது நேரம் கலகலப்பான சூழல் நிலவியது.
மேலும் “வாழைக்கு முட்டுகொடுக்கிற திட்டம் போல இந்த ஆட்சிக்கு முட்டுகொடுக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
அப்போது “முட்டுகொடுக்கிறார்கள்” என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என சபாநாயகர் அறிவுறுத்தியதாக கூறப்படும் நிலையில், அதே வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி தனது கருத்தைத் தொடர்ந்தார்.
அவரது பேச்சைக் கேட்ட அவையில் இருந்த உறுப்பினர்கள் சிரித்தனர். குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) அருகில் அமர்ந்திருந்தபடி சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தார்.
புதிய ஆட்சியின் தொடக்ககாலத்தைச் சுட்டிக்காட்டி எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நகைச்சுவையாக தெரிவித்த இந்தக் கருத்து அவையில் கவனம் பெற்றது.

