மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான கட்டளை நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமித்து விற்பனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை சொக்கிகுளம் பகுதியில் அழகர்கோவில் சாலையில் அமைந்துள்ள ‘அசோக விலாஸ்’ பங்களா மற்றும் அதனைச் சுற்றியுள்ள 1.79 ஏக்கர் நிலம், சந்தை மதிப்பில் ரூ.60 கோடிக்கும் அதிகம் என கூறப்படுகிறது.
இந்த சொத்து, கடந்த 1930-ஆம் ஆண்டு புதுக்கோட்டை ராஜகுமாரர் தட்சிணாமூர்த்தி துரைராஜா – துரைராணி தம்பதியரால் மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கள்ளழகர் கோயில் தர்ம காரியங்களுக்காக உயில் மூலம் வழங்கப்பட்ட கட்டளைச் சொத்தாகும்.
இந்த நிலையில், 2016-ஆம் ஆண்டு கோயில் பெயரை வருவாய்த்துறை ஆவணங்களில் இருந்து நீக்கி, போலி வாரிசு சான்றிதழ்கள் மூலம் தனிநபர்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. பின்னர் பவர் பத்திரங்கள் மூலம் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இணை ஆணையர் அளித்த புகாரின் பேரில், மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் (CCB) முன்னாள் தாசில்தார், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர், சார்பதிவாளர்கள் உள்ளிட்ட 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கை விசாரிக்க 2 ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், மோசடியில் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படும் இளையராஜா (52) என்பவரை பெங்களூருவில் வைத்து போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடன் தொடர்புடைய ராஜ்குமார் (40) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, போலி பட்டா மாற்றத்துக்கு உதவியதாக கூறப்படும் வருவாய்த்துறை அதிகாரிகள், சார்பதிவாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளிடம் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

