அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் இயக்குநரகங்கள் மற்றும் தலைமை அலுவலகங்களில் ஒரே இடத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஊழியர்களின் விவரங்களைச் சேகரித்து அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,நிர்வாக அலுவலர் (Administrative Officer – AO), இளநிலை நிர்வாக அலுவலர் (Junior Administrative Officer – JAO), அலுவலகக் கண்காணிப்பாளர் (Office Superintendent – OS), உதவியாளர் (Assistant) உள்ளிட்ட பணியிடங்களில் பணியாற்றும் ஊழியர்களின் விவரங்களைத் தொகுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரே அலுவலகத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாகவும், 10 ஆண்டுகளுக்கும் மேலாகவும் தொடர்ந்து பணியாற்றி வருபவர்கள் குறித்த முழு விவரங்களை வரும் 23.09.2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அவசரமானது என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பதவி உயர்வின் போது வேறு இடங்களுக்கு மாற்றப்பட்ட பின்னர், நிர்வாக காரணங்கள் அல்லது தற்காலிகப் பணி மாற்றம் உள்ளிட்ட காரணங்களைக் கூறி மீண்டும் பழைய பணியிடத்திற்கே திரும்பியவர்கள் குறித்த விவரங்களையும் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதாவது,
* பதவி உயர்வில் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டவர்கள் யார்?
* அவர்கள் எப்போது மீண்டும் பழைய இடத்துக்கு வந்தனர்?
* அதற்கான காரணம் என்ன?
என்ற விவரங்களும் அறிக்கையில் இடம்பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஒரே இடத்தில் நீண்ட காலம் பணியாற்றுவதால் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை குறைய வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக கணக்கு மற்றும் நிர்வாகப் பிரிவுகளில் நீண்டகால பணியிட நிலைத்தன்மை காரணமாக சில சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும் அரசு கருதுகிறது.
இதையடுத்து, நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களின் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

