காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், திருமங்கலம் ஊராட்சியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடத்தை, மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு. எஸ்.பி.கே. தென்னரசு இன்று திறந்து வைத்தார்.
இந்த புதிய அங்கன்வாடி மையம், கான்ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் இண்டஸ்ட்ரி (CII) மூலம் BorgWarner Cooling Systems நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு (CSR) நிதியான ரூ.26 லட்சம் செலவில் கட்டப்பட்டது. நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி தி. சினேகா, இ.ஆ.ப. தலைமை தாங்கினார்.
பழுதடைந்திருந்த பழைய அங்கன்வாடி மையத்தை அகற்றி, சுமார் 800 சதுர அடி பரப்பளவில் வகுப்பறை, சமையலறை, தனி கழிப்பறை, குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் அமைக்கப்பட்டது.
புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த அமைச்சர் எஸ்.பி.கே. தென்னரசு, குழந்தைகளுடன் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும், சிறப்பான வசதிகளுடன் அங்கன்வாடி மையத்தை அமைத்துக் கொடுத்த BorgWarner நிறுவன நிர்வாகத்தினருக்கு பாராட்டு தெரிவித்து கௌரவித்தார்.
நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு. பார்த்திபன், திருமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி என். ரேகா நரேஷ்குமார், CII தலைவர் திரு. எஸ். நரசிம்மன், BorgWarner நிறுவன மேலாண்மை இயக்குநர் திரு. சைலேஷ் ஜா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி கிருஷ்ணவேணி, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி பவானி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

