தாராபுரம் பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றிக் கழகம் (டிவிகே) சார்பில் ஏழை எளிய மக்களுக்காக நடத்தப்பட்ட இலவச உணவுக்கூடத்தை நகராட்சி அதிகாரிகள் அகற்ற முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அங்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய சுமார் 200-க்கும் மேற்பட்டோருக்கு தினமும் இலவச உணவு வழங்கும் வகையில், “விலையில்லா விருந்தகம்” என்ற தற்காலிக உணவுக்கூடம் கடந்த இரண்டு மாதங்களாக டிவிகே சார்பில் செயல்பட்டு வருவதாகவும். திமுகவின் அழுத்தம் காரணமாக, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நகராட்சி அதிகாரிகள் இந்த உணவுக்கூடத்தின் கட்டமைப்பை அகற்றுவதற்காக வாகனங்களுடன் அங்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இத்தகவலை அறிந்த டிவிகே நிர்வாகி ஜாபர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து ஏராளமான டிவிகே நிர்வாகிகளும், தொண்டர்களும் அங்கு திரண்டு நகராட்சி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

சம்பவ இடத்திற்கு வந்த உள்ளூர் போலீசார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். இதற்கிடையில், இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. டிவிகே தொண்டர்களின் தீவிர எதிர்ப்பு மற்றும் உயர் அதிகாரிகளின் தலையீட்டைத் தொடர்ந்து, உணவுக்கூடத்தை அகற்றும் முயற்சியைக் கைவிட்டு நகராட்சி அதிகாரிகள் அங்கிருந்து தற்காலிகமாகப் பின்வாங்கினர்.

