அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு கொண்டு வரும் சொந்த பணத்திற்கு உரிய வரம்பை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் சார்-பதிவாளராக கடந்த 2021-ம் ஆண்டு பணியாற்றிய கலா என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி பி. புகழேந்தி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
மனுவில், “லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.45 ஆயிரம் வைத்திருந்ததாக என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த பணம் திருமண செலவுக்காக வைத்திருந்தது.
இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
அரசு தரப்பில், “பணியில் இருக்கும் அலுவலர்கள் வைத்திருக்க வேண்டிய பண வரம்பு மற்றும் பதிவேடுகள் பராமரிப்பு தொடர்பாக பதிவுத்துறை சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி கூறியதாவது:
பதிவுத்துறை மட்டுமே இதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அனைத்து அரசுத் துறை ஊழியர்களுக்கும் பொருந்தும் வகையில் பொதுவான வழிகாட்டுதல்களோ அல்லது அரசாணையோ இல்லை.
தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான பணப் பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையில் நடைபெறும் நிலையில், அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு கொண்டு வரும் சொந்த பணத்திற்கு உரிய வரம்பை அரசு நிர்ணயிக்க வேண்டும்.
இதுபோன்ற கட்டுப்பாடுகள் அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை கட்டுப்படுத்த உதவுவதுடன், அரசு ஊழியர்கள் தேவையற்ற சிரமங்களுக்கு உள்ளாவதையும் தடுக்கும்.
ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்க இதுபோன்ற வழிகாட்டுதல்கள் அவசியம் என நீதிபதி தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழக அரசு செப்டம்பர் 3-ம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

