திருச்சி மாவட்டம், துறையூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் தனியார் பாதுகாவலர்களுக்கான தீ பாதுகாப்புப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிலைய அலுவலர் பாலசந்தர் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சியில், துறையூர் பகுதியில் உள்ள தனியார் அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பாதுகாவலர்கள் பங்கேற்றனர்.
இதில், மின்சாரத்தால் ஏற்படும் தீ விபத்துகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது, சமையல் எரிவாயு உருளையில் தீப்பற்றும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், எரிபொருள் கசிவால் ஏற்படும் தீ விபத்துகளில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து தீயணைப்பு வீரர்கள் விளக்கினர்.
மேலும், தீயணைப்புக் கருவிகளை முறையாகக் கையாளும் விதம், கட்டடங்களில் தீ விபத்து ஏற்படும் போது தீயணைப்பானை (Fire Extinguisher) பயன்படுத்தும் முறை ஆகியவை செயல்விளக்கத்துடன் எடுத்துரைக்கப்பட்டன.
பாதுகாவலர்கள் அவசர காலங்களில் பதற்றமின்றி செயல்பட்டு, தீ விபத்துகளைத் தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்துவதற்கான அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் துறையூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் பழனிச்சாமி, சுப்பிரமணியன், ஜெயராமன், ஜாகிர், பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

