தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை வேட்டை: 35 அரசு அலுவலகங்களில் ரூ.1.18 கோடி முறைகேடு அம்பலம்!

தமிழகம் முழுவதும் 35 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத ரொக்கம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ.1.18 கோடி மதிப்பிலான பணம் கண்டறியப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள், மாவட்ட ஆய்வு அதிகாரிகளுடன் இணைந்து 27.08.2026 அன்று பல்வேறு அரசு அலுவலகங்களில் ஒரே நேரத்தில் இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.
இதில், கணக்கில் வராத ரூ.28.24 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கூகுள் பே (G-Pay) உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ.89.89 லட்சம் தொகை கண்டறியப்பட்டது.
சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், திருச்சி, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
கிண்டியில் உள்ள முதன்மை மின்சார ஆய்வாளர் அலுவலகத்தில் மட்டும் அதிகபட்சமாக ரூ.31.52 லட்சம் மதிப்பிலான ஜி-பே பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் லஞ்சப் புகார்களை கட்டுப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த சோதனை, அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

