காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த பசுமைவெளி விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ள நிலையில், இத்திட்டம் தொடர்பாக திமுக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் ஆய்வறிக்கையை வெளியிடாமல் வைத்தது ஏன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, பரந்தூர் விமான நிலையம் தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தது. அந்தக் குழுவின் அறிக்கை வெளியிடப்படாமல் இருப்பது குறித்து தனது சமூக வலைதளப் பதிவில் பெ.சண்முகம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.
“அறிக்கையை வெளியிடாதது ஏன்?”
மச்சேந்திரநாதன் ஐஏஎஸ் தலைமையிலான நிபுணர் குழுவின் அறிக்கையை திமுக அரசு முழுமையாக வெளிப்படுத்தாமல் வைத்தது ஏன்? அந்த அறிக்கையை வெளியிட வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் பொதுவெளிக்கு கொண்டு வராததன் காரணம் என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் ஆரம்பம் முதலே அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவில்லை என்றும், அறிக்கையில் உள்ள தகவல்களை மறைக்க வேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டது என்பதை அரசு விளக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
திட்டம் ரத்து வரவேற்பு
பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதை சிபிஎம் வரவேற்றுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு, நீர்நிலைகள் அழிவு மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
மேலும், மாற்று இடத்தில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக முடிவு எடுக்கும் முன்பு, அப்பகுதி மக்களின் கருத்துகளை அரசு கேட்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
விவசாயிகள் கோரிக்கை
திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர்களது நிலங்களை மீண்டும் வழங்க வேண்டும் என்றும், போராட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

