நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நெல்லக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி கூடலூரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்குள் முன் அனுமதியின்றி நுழைந்து வீடியோ பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
பணிமனையில் பழுதுபார்க்க நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்துகள், பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை தனது செல்போன் மூலம் பதிவு செய்துள்ளார்.
சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரப்பியதாக புகார்
கூடலூர் பேருந்து நிலையத்திலிருந்து கிராமப்புற பகுதிக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்து ஒன்று பழுதாகி நின்ற சம்பவத்தையும் விக்னேஸ்வரன் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் பணிமனை வீடியோவுடன் அதனை இணைத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகவும், அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் அதிகாரிகள் குறித்து அவதூறான கருத்துகளை வெளியிட்டு பொதுமக்களிடம் தவறான தகவலை பரப்பியதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து கூடலூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைப்பு
விசாரணையைத் தொடர்ந்து விக்னேஸ்வரனை போலீசார் கைது செய்து கூடலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி அவர் கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் குறித்து சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

