மலையாள மொழி பேசும் கேரள மக்களின் உன்னதமான பண்டிகை ஓணம். தமிழர்களுக்கு பொங்கல் திருநாளைப் போல், கேரள மக்களிடையே இரண்டறக் கலந்தது திருவோணம் பண்டிகை. சமத்துவத்தின் அடையாளமாகவும் விளங்கும் திருவோணம் பண்டிகையானது, மலையாள மாதமான சிங்கம் (ஆவணி) மாதத்தில், அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள், விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
திருவோணம் கொண்டாடுவதன் பின்னணி!
திருவோணம் பண்டிகை எப்படி வந்தது என்று பார்த்தால், அதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான புராண வரலாறு உள்ளது. நற்பண்புகள் நிறைந்த மகாபலி சக்கரவர்த்தி கேரளா முழுவதையும் ஆட்சி செய்த காலத்தில், நாட்டில் வறுமையோ, பொய் புரட்டோ இன்றி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர்.
மகாபலியின் புகழைக் கண்டு, வான் உலகில் உள்ள தேவர்கள் பொறாமை கொண்டு, திருமாலிடம் முறையிட்டனர். தேவர்கள் திருப்தி அடைய வேண்டி, திருமால் ‘வாமனன்’ அவதாரம் எடுத்து, மகாபலியிடம் ஒரு அந்தணன் வடிவில் சென்று, மூன்றடி மண் தானமாகக் கேட்டார். மூன்று அடி மண் தானே என்று, அதை தருவதாக மன்னன் மகாபலி ஒப்புக் கொண்டார்.

வாமனன் விண்ணையும் மண்ணையும் ஓரடியாலும், மற்றொரு அடியால் உலகத்தையும் அளந்து, மூன்றாவது அடிக்கு இடம் கேட்க, மகாபலி திகைத்து நின்றார். வந்திருப்பது எம்பெருமான் என்று அறிந்து வணங்கினார். 3ஆவது அடிக்கு தன் தலையையே கொடுத்தார்.
மன்னனின் தியாகத்தைப் பாராட்டிய திருமால், ஆண்டிற்கு ஒருமுறை தன் மக்களை வந்து பார்க்க மகாபலிக்கு வரமளித்தார். அப்படித் தன் மக்களைப் பார்க்க மகாபலி சக்கரவர்த்தி பூமிக்கு வரும் புனிதமான நாளே ‘திருவோணம்’ ஆகும்.
ஏன் விரும்பிக் கொண்டாடப்படுகிறது ஓணம்?
ஜாதி, மத வேறுபாடுகளைக் கடந்து கேரள மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கொண்டாடும் ஒரே திருவிழா ஓணம். பழங்காலச் சமத்துவத்தையும் செழிப்பையும் நினைவுகூரும் வகையில் மக்கள் இதைத் தங்கள் சொந்த வீட்டு விழாவாக விரும்பி மகிழ்கிறார்கள்.
ஓணம் பண்டிகையின்போது, அஸ்தம் நட்சத்திரம் முதல் வீட்டின் முன்றிலில் வண்ண வண்ணப் பூக்களால் ‘பூக்களம்’ இடத் தொடங்குவர். ஒவ்வொரு நாளும் பூக்களத்தின் அளவு பெரிதாகிக் கொண்டே சென்று, திருவோணத்தன்று பிரம்மாண்டமாக மாறும்.
பூக்களத்தின் நடுவில் களிமண்ணால் ஆன ‘ஓணத்தப்பன்’ (வாமன உருவம்) பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படும். பெண்கள் கூடி ஆடும் ‘திருவாதிரைக்களி’, ஆடவர்களின் ‘புலிக்களி’, விறுவிறுப்பான ‘வள்ளம்களி’ (படகுப்போட்டி) ஆகியவை ஓணத்தின் முதன்மை பாரம்பரிய நிகழ்வுகள் ஆகும்.
ஸ்பெஷல் விருந்து ‘ஓணச்சத்யா’

சொத்தை விற்றாவது ஓணச் சாப்பாடு சாப்பிட வேண்டும் என்பது மலையாளப் பழமொழி. திருவோணத்தின் முக்கிய சிறப்பம்சமே ‘ஓணச்சத்யா’ எனப்படும் பிரம்மாண்ட விருந்துதான். வாழை இலையில் பரிமாறப்படும் இந்த முழுமையான சைவ விருந்தில் குறைந்தது 20 முதல் 30 வகையான உணவுகள் இடம்பெறும்
குறிப்பாக, மட்ட அரிசிச் சோறு, பருப்பு நெய், சாம்பார், காளன், ஓலன், அவியல், தோரன், பச்சடி, கிச்சடி, எரிசேரி, இஞ்சிப்புளி, நேந்திரங்காய் சிப்ஸ், மாங்காய் ஊறுகாய், அப்பளம், பாலடைப் பாயாசம், அடப்பிரதமன், கடலைப் பருப்புப் பாயாசம் இடம் பெற்றிருக்கும்.
பாரம்பரிய ஆடை கலாச்சாரம்
திருவோணத்தன்று புதிய ஆடைகளான ‘ஓணக்கோடி’ அணிவது மரபு. பெண்கள் தங்கக் கரைகளுடைய வெண்மையான ‘செட்டுச் சேலை’ அல்லது ‘கசவுச் சேலை’ அணிவர். சிறுமிகள் ‘பட்டுப் பாவாடை’ உடுத்துவர். ஆண்களும், தங்கக் கரை போட்ட வெள்ளை வேட்டி மற்றும் மேலங்கி அணிந்து கொள்வர்.
தமிழகத்தில் உள்ள கேரள மக்களும் ஓணம் கொண்டாடுவதன் மூலம், அப்பண்டிகை இங்கும் பிரபலமாகி வருகிறது. கல்லூரிகளில் கலை விழாக்கள், உணவகங்களில் ஓணம் சாப்பாடு என்று, தமிழகத்தில் ஓணம் களை கட்டி வருகிறது.
மகிழ்ச்சி, சமத்துவம், அமைதி மற்றும் இயற்கை அன்னை அளிக்கும் செழிப்பு ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்துக் கொண்டாடும் திருவோணம், ஒவ்வொரு மனிதனுக்கும் அன்பையும் மனிதநேயத்தையும் நினைவூட்டும் ஒரு உன்னத நன்னாள் என்றால் மிகையல்ல.

