தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 379 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.17,04,739 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன் குமார் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் மாவட்டத்தில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, 2026 மே மாதம் முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்ற 24 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 168 புதிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகள் மற்றும் 88 மறுமதிப்பீட்டு அடையாள அட்டைகள் என மொத்தம் 256 UDID அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலம் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் தகுதியான பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்களுடன் கூடிய பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், சக்கர நாற்காலி, காதொலி கருவி, மூன்று சக்கர சைக்கிள், செயற்கை உறுப்புகள் உள்ளிட்ட பல்வேறு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மேலும், 8 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு ரூ.34,000 கல்வி உதவித்தொகையும், 4 பேருக்கு ரூ.80,000 வங்கி கடன் மானியமும் வழங்கப்பட்டது. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆயாக்களுக்கு முதல் காலாண்டு ஊதிய மானியமாக ரூ.1,78,300 வழங்கப்பட்டது.
தேசிய அறக்கட்டளைச் சட்டத்தின் கீழ் 10 பேருக்கு பாதுகாவலர் சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உதவியாளர் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் கூடுதல் உதவிக்காக 60 பயனாளிகள் மாவட்டத் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2026 மே மாதம் முதல் தற்போது வரை, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 379 பயனாளிகளுக்கு ரூ.17,04,739 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் பயனடைந்த நாகப்பட்டினம் போலகம் கிராமத்தைச் சேர்ந்த ஆவுடையப்பன், செவித்திறன் பாதிப்பு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்ட காதொலி கருவி தனது இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க உதவியதாக தெரிவித்தார். இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை அவர் தெரிவித்தார்.

