தமிழ்நாடு முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாக பெருமளவு லஞ்சம் கைமாறிய அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 35 வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த மெகா சோதனையின் முடிவில், கணக்கில் காட்டப்படாத ரூ. 82 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கம் லஞ்சப் பணமாக அதிகாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதிகாரிகள் ரொக்கமாக லஞ்சம் பெறுவதைத் தவிர்த்து, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகையான ரூ. 82.10 லட்சத்தில், ரூ. 68 லட்சத்து 32 ஆயிரம் கூகுள் பே (G-Pay) செயலி மூலமாகவே லஞ்சமாக பெறப்பட்டுள்ளது என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதைத் தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும், அதிகாரிகள் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் நூதன முறையில் லஞ்சம் பெற்று வருவது இந்த சோதனையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

