மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊரக வளர்ச்சித்துறையில் உதவி இயக்குனர், இணை இயக்குனர் மற்றும் கூடுதல் இயக்குனர் ஆகிய பதவிகளுக்கான பதவி உயர்வு ஆணைகளை அரசு உடனடியாக வெளியிட வேண்டும். மேலும், உதவி இயக்குனர் நிலையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதிய உணவு இடைவேளையின் போது நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் கிளைத் தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பத்மபாலாஜி , மாவட்ட துணை செயலாளர் ரஜினி, கிளை செயலாளர் சந்தோஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

