அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களைக் காணோம் என்று தேடினால், கடைசியில் மொத்தமாக 229 டாக்டர்களையே காணோம் என்ற அதிரடித் தகவல் மெகா காமெடியாகவும், அதே சமயம் மகா கோபமாகவும் வெடித்துள்ளது!
மக்கள் கட்டிய வரிப்பணத்தில் சொகுசாகப் படித்துவிட்டு, அரசுக்கு ₹50 கோடி நாமம் போட்டுவிட்டு எஸ்கேப் ஆகியிருக்கும் 229 மருத்துவர்களின் பட்டியலை ‘அறப்போர் இயக்கம்’ ஆர்.டி.ஐ மூலமாகப் பிடித்துக் கொடுத்துள்ளது.
“இதெல்லாம் உங்க ஆட்சியில் ஆரம்பிச்சது… இல்லை இல்லை, உங்க ஆட்சியில் தான் தொடருது” என்று எதற்கெடுத்தாலும் கடந்த காலங்களில் மாறி மாறிப் பல்லவி பாடிய அதிமுக மற்றும் திமுக ஆட்சிகள், இந்த விஷயத்தில் எப்படி ‘ஒற்றுமையாக’ தூங்கியிருக்கிறார்கள் என்பதுதான் ஹைலைட்.
கடந்த 2012-ல் (அதிமுக ஆட்சி), 2019-ல் (அதிமுக ஆட்சி), 2022-ல் (திமுக ஆட்சி) என மருத்துவக் கல்வி இயக்குநரகம் (DME) ‘பணிக்கு வராத டாக்டர்களைப் பிடிங்கப்பா, பாஸ்போர்ட்டை முடக்குங்கப்பா’ என்று வருடந்தோறும் சுற்றறிக்கைகளைத் தட்டிவிட்டுக் கொண்டே இருந்தது. ஆனால், அப்போதைய அமைச்சர்களான சி. விஜயபாஸ்கரும் சரி, மா. சுப்பிரமணியனும் சரி… ‘ஆகா… சுற்றறிக்கை பறக்குதே, பார்க்க எவ்வளவு அழகா இருக்கு!’ என்று வேடிக்கை பார்த்தார்களே தவிர, ஒரு நயா பைசா கூட வசூலிக்கவில்லை; ஒரு பாஸ்போர்ட்டையும் முடக்கவில்லை.
விளைவு? சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் மிக முக்கியமான ‘அவசரச் சிகிச்சை’ பிரிவில் இருக்க வேண்டிய ஒரு புண்ணியவான், 2011 ஆம் ஆண்டிலிருந்து ஆபீசுக்கு ‘டாட்டா’ காட்டிவிட்டு எஸ்கேப் ஆகியிருக்கிறார். 15 வருடங்களாக ஒரு அரசு ஊழியர் வேலைக்கே வராமல் சம்பளத்தையும், சலுகையையும் அனுபவித்துவிட்டு பிரைவேட்டில் கல்லா கட்டுகிறார் என்றால், இத்தனை காலம் இந்த இரு கட்சிகளின் நிர்வாகமும் கும்பகர்ண தூக்கத்தில் இருந்ததா அல்லது ‘கள்ளக் கூட்டணி’ அமைத்துக் கொண்டு கல்லா கட்டியதா?
ஏழை மக்களுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக, முதுநிலை மருத்துவப் படிப்பில் (PG) 50% இடஒதுக்கீடு, நீட் தேர்வில் 30% வெயிட்டேஜ் மார்க் என அள்ளிக் கொடுத்து, படிக்கும் 3 வருடங்களும் மக்களின் வரிப்பணத்தில் முழுச் சம்பளமும் கொடுத்து இவர்களைப் படிக்க வைத்தால், படித்து முடித்ததும் ‘பை-பை’ சொல்லிவிட்டு ஓடிவிட்டார்கள்.
- சென்னை – 49 பேர்
- தஞ்சாவூர் – 24 பேர்
- திருச்சி – 16 பேர்
என லிஸ்ட் நீள்கிறது. இவர்களிடம் இருந்து ஒப்பந்த விதிகளின்படி வசூலிக்க வேண்டிய ₹40 கோடியில் இருந்து ₹50 கோடி வரையிலான பிணைத் தொகையை (Bond Amount) அப்படியே அரசு கோவிந்தா போட்டுவிட்டது!
இப்போது “நாங்கள் தான் நிஜமான மாற்றம்” என்று வந்துள்ள தமிழக வெற்றிக் கழக (TVK) அரசு, முந்தைய அரசுகள் போல “அவங்க தூங்குனாங்க… நாங்களும் தூங்குவோம்” என்று குறட்டை விடுமா அல்லது சாட்டையை எடுக்குமா என்பதுதான் மக்களின் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி!
மக்கள் பணத்தில் படித்துவிட்டு, ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டுப் பிரைவேட் ஆஸ்பத்திரிகளில் கோடி கோடியாகச் சம்பாதிக்கும் இந்த 229 சமூகத் துரோகிகளின் பெயர் மற்றும் புகைப்படப் பட்டியலை உடனடியாக பொதுவெளியில் போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டும்.
வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய இந்த வெள்ளை அங்கி கொள்ளையர்கள் மீது போலீசில் புகார் கொடுத்து, பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும்.
மெடிக்கல் கவுன்சில் பதிவை ரத்து செய்து, இவர்களின் பிரைவேட் கல்லாவிற்குப் பூட்டுப் போட வேண்டும்.
திமுக – அதிமுக அரசுகள் செய்த வரலாற்றுத் துரோகத்திற்குத் தற்போதைய டிவிகே அரசு முற்றுப்புள்ளி வைக்குமா? அல்லது “அவர்களைப் போய் கேளுங்கள்” என்று பழைய ரெக்கார்டையே தேய்க்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

