தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் பல மாவட்டங்களில் சத்தத்தைத் தாண்டி (100°F) பதிவாகி வருகிறது. கடுமையான வெப்ப அலை காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகின்றன.
பசுமையாகக் காட்சியளிக்க வேண்டிய விளைநிலங்கள், போதிய தண்ணீரின்றி வெடிப்பு ஏற்பட்டு பாலைவனம் போல காட்சியளிப்பது விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீப நாட்களாக சில மாவட்டங்களில் லேசான மழை பெய்த போதிலும், கடுமையான வெயில் மற்றும் விவசாயத்திற்குப் போதிய தண்ணீர் கிடைக்காததால் பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் நடப்பாண்டு சுமார் 2,000 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடியும், 5,000 ஏக்கரில் பருத்தி சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் ஆழ்துளை கிணறுகளை (Borewell) மட்டுமே நம்பி விவசாயிகள் இந்த சாகுபடியை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அரசு அறிவித்தபடி விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம் (3 Phase Power) முறையாக வழங்கப்படுவதில்லை என்றும், பல பகுதிகளில் அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், ஆழ்துளை கிணறுகள் இருந்தும் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது நிலத்தடி நீர்மட்டமும் வேகமாகத் தாழ்ந்து வருவதால், சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை பயிர்களால் தாங்க முடியவில்லை. குறிப்பாக திருமருகல், ஆலத்தூர், கொத்தமங்கலம், அம்பல், திருப்புகலூர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் சுமார் 500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகி வீணாகி வருகின்றன.
“தற்போது நெற்பயிர்கள் அனைத்தும் பால் பிடிக்கும் பருவத்தில் இருக்கின்றன. இந்த இக்கட்டான சூழலில் பயிர்களுக்குத் தண்ணீர் மிகவும் அத்தியாவசியமானது. ஆனால் மின் தடையால் தண்ணீர் பாய்ச்ச முடியாமல், பயிர்களின் வேர் பகுதிகள் அனைத்தும் காயத் தொடங்கியுள்ளன.
நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்கள் அனைத்தும் தண்ணீரின்றி வெடித்துக் காணப்படுகின்றன. கருகும் பயிர்களைப் பார்க்கும்போது நெஞ்சம் வலிக்கிறது.”
வட்டிக்குக் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் முதலீடு செய்த உழைப்பு அனைத்தும் வீணாவதைக் கண்டு விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, கருகி வரும் குறுவை மற்றும் பருத்திப் பயிர்களைக் காப்பாற்ற திருமருகல் வட்டாரப் பகுதிக்கு தங்கு தடையின்றி முறையாக மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர். தவறும் பட்சத்தில், விவசாயிகள் மீள முடியாத பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர்.

