இந்தியாவின் 16-ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census 2026) இந்த ஆண்டு முற்றிலும் புதிய வடிவில், டிஜிட்டல் முறையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. காகிதப் படிவங்கள் மற்றும் பெரிய பதிவேடுகளுக்கு விடை கொடுத்துவிட்டு, மொபைல் செயலிகள் (Mobile Apps) மற்றும் பிரத்யேக இணையதளம் மூலம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இதில் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், பொதுமக்கள் தங்களின் விபரங்களை அரசிடம் சமர்ப்பிக்க அதிகாரிகள் வரும் வரை காத்திருக்கத் தேவையில்லை.”சுய கணக்கெடுப்பு” (Self-Enumeration) என்ற புதிய வசதி மூலம், பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே, தங்களின் ஸ்மார்ட்போன் அல்லது கணினியைப் பயன்படுத்தி 5 நிமிடங்களில் இந்த விபரங்களைப் பதிவு செய்ய முடியும்.
ஆன்லைனில் நீங்களே செய்வது எப்படி? (Step-by-Step Guide)
உங்கள் மொபைல் மூலம் சுய கணக்கெடுப்பை எவ்விதத் தவறும் இல்லாமல் எளிதாகச் செய்ய கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்:
- இணையதளத்திற்குச் செல்லுதல்:
முதலில் உங்கள் மொபைல் ப்ரௌசரில் se.census.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். அங்கு உங்கள் மாநிலமாக ‘Tamil Nadu’ என்பதைத் தேர்வு செய்து, திரையில் தோன்றும் Captcha குறியீட்டை உள்ளிடவும். - OTP சரிபார்ப்பு மற்றும் மொழித் தேர்வு:
அடுத்த பக்கத்தில் உங்களுடைய நடப்பில் உள்ள 10 இலக்க மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். உங்களுக்குப் பரிச்சயமான மொழியைத் (தமிழ் உட்பட 16 மொழிகள்) தேர்ந்தெடுத்த பின், உங்கள் மொபைலுக்கு வரும் OTP (One-Time Password) குறியீட்டைப் பதிவிட்டு லாகின் செய்யவும். - இருப்பிட விபரங்கள்:
உங்கள் மாவட்டம், தாலுகா, கிராமம்/நகரம், வார்டு எண் மற்றும் பின்கோடு (PIN Code) போன்ற விபரங்களைத் துல்லியமாக உள்ளிட வேண்டும். கூகுள் மேப்ஸ் (Google Maps) தொழில்நுட்பம் மூலம் உங்கள் வீட்டின் இருப்பிடம் டிஜிட்டல் முறையில் உறுதி செய்யப்படும். - கேள்விகளுக்குப் பதிலளித்தல்:
இதன்பின் திரையில் தோன்றும் 33 கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். இதில் வீட்டின் தரம் (கூரை/மாடி), குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சாரம் மற்றும் இணைய இணைப்பு உள்ளதா, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, அவர்களின் கல்வி, தொழில் மற்றும் வாகன விபரங்கள் போன்ற எளிய கேள்விகள் இடம் பெற்றிருக்கும். - SE ID-ஐப் பெறுதல்:
அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்து ‘Submit’ கொடுத்தவுடன், உங்கள் மொபைல் எண்ணுக்கு 11 அல்லது 16 இலக்க சுய கணக்கெடுப்பு எண் (Self-Enumeration ID – SE ID) குறுஞ்செய்தியாக (SMS) அனுப்பப்படும். இதனைப் பத்திரமாகச் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தத் திட்டத்தின் முக்கிய நன்மைகள் மற்றும் காலக்கெடு நீங்கள் ஆன்லைனில் விபரங்களைப் பதிவு செய்திருந்தாலும், ஆகஸ்ட் மாதத்தில் கணக்கெடுப்பு அதிகாரிகள் உங்கள் வீட்டிற்கு நேரில் வருவார்கள். அப்போது நீங்கள் இந்த SE ID எண்களை மட்டும் காட்டினால் போதும். அவர்கள் அதைத் தங்களின் மொபைல் செயலியில் ‘Sync’ செய்து கொள்வார்கள். உங்களிடம் மீண்டும் எந்தக் கேள்வியும் கேட்கப்பட மாட்டாது. இதனால் உங்களின் நேரமும், அதிகாரிகளின் நேரமும் மிச்சமாகும்.
- காலக்கெடு: ஆன்லைன் மூலம் பொதுமக்களே நேரடியாக விபரங்களைப் பதிவு செய்யும் இந்த “சுய கணக்கெடுப்பு” வசதி ஜூலை 17 முதல் ஜூலை 31, 2026 வரை 15 நாட்களுக்கு மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.
- பாதுகாப்பு: நீங்கள் அளிக்கும் தனிப்பட்ட விபரங்கள் அனைத்தும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் (Census Act) கீழ் முற்றிலும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். இந்தத் தரவுகள் வேறு எந்தவொரு வணிக நோக்கத்திற்கோ அல்லது வெளி நபர்களுக்கோ பகிரப்படாது என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
நேரில் வரும் அதிகாரிகளிடம் சொல்லலாம்:
ஒருவேளை உங்களால் ஜூலை 31-க்குள் ஆன்லைனில் பதிவு செய்ய முடியாவிட்டால் கவலைப்படத் தேவையில்லை. ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30, 2026 வரை கணக்கெடுப்பு அதிகாரிகள் உங்கள் வீட்டிற்கே நேரில் வந்து தங்களின் மொபைல் செயலி மூலம் உங்கள் விபரங்களைச் சேகரித்துக் கொள்வார்கள்.

