நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் தொடர்பான முறைகேடுகள் குறித்த புகார்களின் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை (DVAC) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் இல்லம் மற்றும் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கை குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறை தலைமையகத்தின் குற்ற எண் 7/2026-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவுகள் 120B, 406, 409 மற்றும் 420; பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 2023-ன் தொடர்புடைய பிரிவுகள்; மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன் பிரிவுகள் 7, 7A, 8, 9, 12 மற்றும் 13(2) ஆகியவற்றுடன் இணைந்த 13(1)(a) ஆகியவற்றின் கீழ் இந்தக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விசாரணையின் ஒரு பகுதியாக, செப்டம்பர் 5 அன்று சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையின்போது, டெண்டர் முறைகேடுகள் தொடர்பான 241 முக்கிய ஆவணங்கள் மற்றும் பல்வேறு வகையான மின்னணு ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இவ்வழக்கு தற்போது தீவிர விசாரணையில் இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் (செய்திக்குறிப்பு எண் 83, தேதி 05.09.2026) தெரிவிக்கப்பட்டுள்ளது.

