“தவெக அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை; தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் திட்டங்கள் கிடப்பில் உள்ளன” என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சரான ஆர்.பி. உதயகுமார், தவெக அரசு மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தவெக அரசிடம் வெளிப்படைத் தன்மை இல்லை என்று, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 100 நாட்களின் தவெக அரசின் வெளிப்படைத்தன்மைக்கும் அரசுக்கும் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதற்கு டெண்டர் சர்ச்சையையே காரணம்.
தவெக தேர்தல் 384-க்கு மேல் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தது. மக்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். மகளிருக்கு ரூபாய் 2500 வழங்குவோம் என்று கூறினார்கள். ஆனால் அந்த திட்டத்திற்கு 30 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது என பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
ஆண்டுக்கு 6 சிலிண்டர் வழங்குவோம் என்று சொன்ன அந்த திட்டம் கிடப்பில் உள்ளது. வேலையில்லா பட்டதாரிகளுக்கு 4000 ரூபாய் வழங்குவோம் என்று சொன்ன திட்டமும், அனைத்து பேருந்துகளிலும் மகளிர் கட்டணம் இல்லா பேருந்து என்ற திட்டமும் கிடப்பில் இருக்கிறது.
தவெக அரசின் முதல் 100 நாட்களில் பணிகள் எல்லாம் முடங்கி கிடக்கிறது. ஆனால் முதல்வரின் நவீன அறை மாற்றம் என்கிற அந்த அறிவிப்பில் 90% பணிகள் முடிவடைந்த பின்பு தான் ரூ. 5.5 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டு உள்ளது. இதனால் வெளிப்புறத்தன்மை கேள்விக்குறியாகி இருக்கிறது.
விஜய் முதல்வராக பதவியேற்றபோது, மக்களிடம் வெளிப்படைத்தன்மைக்கு விஜய் உறுதி அளிக்கிறேன் என்று அவர் வீர முழக்கம் இட்டார். நிர்வாகம் அனுபவம் இல்லாத ஆட்சியாளர்களாக இருக்கிறார்களா, ஆற்றல் இல்லாதவர்களாக இருக்கிறார்களா, மக்கள் மீது அக்கறைகள் இருக்கிறதா, மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தற்போது இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்வதை மட்டும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
அரசு இனி வருகிற காலங்களில் இதை சீர்படுத்துமா, செம்மைப்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

