மலைச்சாலையில் ஜீப்பின் வெளிப்புறத்தில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்ததாக பரவிய வீடியோ தொடர்பாக, முகமது வாசிம் என்பவரை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர். சாகசப் பயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
கொடைக்கானல் கீழ்பூமி–பள்ளங்கி பகுதியில் திறந்தவகை ஜீப்பில் சிலர் ஆபத்தான முறையில் பயணம் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஜீப்பின் உள்ளே அமர்ந்து செல்லாமல், இருபுறங்களிலும் தொங்கியபடி மலைச்சாலையில் பயணம் செய்தது வீடியோவில் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார், இ.கா.ப. உத்தரவின்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. கொடைக்கானல் காவல் துணைக் கண்காணிப்பாளர் காயத்திரி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் புகழேந்தி தலைமையிலான போலீசார் சமூக வலைதள வீடியோ மற்றும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
விசாரணையில், கொடைக்கானல் ஆனந்தகிரி முதல் தெருவைச் சேர்ந்த முகமது அலி ஜின்னாவின் மகன் முகமது வாசிம், நண்பர்களுடன் இணைந்து ஆபத்தான முறையில் பயணம் செய்ததாக தெரியவந்தது. இதையடுத்து ஆகஸ்ட் 26-ஆம் தேதி முகமது வாசிம் கைது செய்யப்பட்டார். மேலும், சாகசப் பயணத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வாகனமும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
வீடியோவில் இடம்பெற்றுள்ள மற்ற நபர்களை அடையாளம் காணும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மலைச்சாலையில் சாகசம் வேண்டாம்!
கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் குறுகிய சாலைகள், ஆபத்தான வளைவுகள் மற்றும் சரிவுகள் அதிகம் உள்ளதால், வாகனத்தின் வெளிப்புறத்தில் தொங்கியபடி பயணம் செய்வது பெரும் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற செயல்கள் பயணிப்பவர்களுக்கு மட்டுமின்றி, எதிரே மற்றும் பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, சுற்றுலா பயணிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

