மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலிருந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள், பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சோழவந்தான் மற்றும் வாடிப்பட்டி பகுதிகளிலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவற்றில் பல சேவைகள் நிறுத்தப்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அவற்றில் முக்கியமானதாக, 8-ஆம் எண் அரசு பேருந்து வாடிப்பட்டியிலிருந்து தினமும் காலை 8.30 மணிக்கு புறப்பட்டு திருவேடகம், மேலக்கால், செக்கானூரணி வழியாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சென்று வந்தது. இந்த பேருந்தை பல்கலைக்கழக பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர்.
மேலும், காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும், செக்கானூரணி வழியாக உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணம் செய்யும் பொதுமக்களுக்கும் இந்த பேருந்து மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக கூறப்படுகிறது.
காலை நேரத்தில் கல்வி, வேலை மற்றும் அன்றாட தேவைகளுக்காக பயணிக்கும் மக்களுக்கு இந்த பேருந்து முக்கிய போக்குவரத்து வசதியாக இருந்த நிலையில், எந்தவித காரணமும் தெரிவிக்கப்படாமல் கடந்த 10 ஆண்டுகளாக சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தற்போது புதிய அரசு போக்குவரத்துத் துறையில் பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வாடிப்பட்டியிலிருந்து மேலக்கால், செக்கானூரணி வழியாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு இயக்கப்பட்ட 8-ஆம் எண் பேருந்து சேவையை மீண்டும் உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

