முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட கரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) அதிகாரிகள் இன்று (ஜூலை 29) அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை சுமார் 7 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை, 5 தனித்தனி குழுக்களாக பிரிந்த அதிகாரிகளால் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டது. துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரின் பாதுகாப்புடன் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகே உள்ள ராமேஸ்வரப்பட்டியில் அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக இல்லத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி, அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதனுடன், அவரது உதவியாளர் சுப்பிரமணி வீடு, கோயம்பள்ளியில் உள்ள திமுக ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் (பாஸ்கர்) வீடு, கரூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம், மேலும் கோதை நகர் பகுதியில் உள்ள தொழிலதிபர்கள் கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சோதனையின்போது முக்கிய ஆவணங்கள், கணினி பதிவுகள் மற்றும் நிதி பரிவர்த்தனை தொடர்பான தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அல்லது பொருட்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.
சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதால் கரூர் மாவட்டத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த நடவடிக்கை தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

