தமிழகத்தில் வெட்டப்படும் கல், ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிம வளங்களை புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளைத் தவிர பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு மூன்று மாதங்களுக்கு தற்காலிக தடை விதித்து, புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் டாக்டர் டி. பிரபுசங்கர், ஐ.ஏ.எஸ்., உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டவிரோத சுரங்கம், கனிமப் போக்குவரத்து மற்றும் சேமிப்பு தடுப்பு விதிகள், 2011-ல் புதிதாக சேர்க்கப்பட்ட விதி 3(A)-ன் கீழ் இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தின் உள்நாட்டு கட்டுமானத் தேவையை பூர்த்தி செய்த பின்னரே பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களை அனுப்பும் நோக்கில் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அரசாணையில், அண்டை மாநிலங்களுக்கு அதிகளவில் கல் மற்றும் ஜல்லி எடுத்துச் செல்லப்படுவதால் மாநிலத்தில் கட்டுமானப் பொருட்களின் தட்டுப்பாடு, விலை உயர்வு, சாலை சேதம், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சட்டவிரோத சுரங்கத் தொழில்கள் அதிகரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் கூறுகையில், தமிழ்நாட்டில் வெட்டப்படும் கனிம வளங்களில் 70 முதல் 80 சதவீதம் வரை அனுமதிக்கப்பட்ட அளவை மீறி சட்டவிரோதமாக வெட்டப்படுவதாகவும், அதில் பெரும்பாலான அளவு அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர்.
மேலும், அனுமதிக்கப்பட்ட ஆழத்தை விட பல மடங்கு ஆழமாக கல் வெட்டப்படுவதால் நிலத்தடி நீர் பாதிப்பு, சுற்றுச்சூழல் சீர்கேடு, மலைகள் மற்றும் இயற்கை வளங்கள் அழிவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோத கல் குவாரிகளை மூடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போதெல்லாம், சட்டவிரோத குவாரி கும்பல்கள் கட்டுமானப் பொருட்களின் விலையை செயற்கையாக உயர்த்தி சந்தையில் தட்டுப்பாட்டை உருவாக்குவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இதனால், தமிழகத்தின் கட்டுமானத் தேவையை முதலில் பூர்த்தி செய்து, அதன் பிறகு மீதமுள்ள கனிம வளங்களை மட்டுமே பிற மாநிலங்களுக்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
மேலும், பல ஆண்டுகளாக நடைபெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோத கல் குவாரி முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் ₹20,000 கோடிக்கும் அதிகமான வருவாய் இழப்பை மீட்டெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் வெளிச்சத்துக்கு வந்ததாகக் கூறப்படும் கல்குவாரி முறைகேடுகள் தொடர்பாக உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து, சட்டவிரோத சுரங்க மாபியா கும்பல்களை ஒடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், கனிம வளங்களை அண்டை மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதை தற்காலிகமாகத் தடை செய்து, அதற்கான சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, மாநிலத்தின் கனிம வளங்களை பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையாக பல்வேறு தரப்பினரால் வரவேற்கப்படுகிறது.

