நீலகிரி மாவட்டத்தில் புதிய வகை கொசுக்களின் வருகையால் பொதுமக்களிடையே கவலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகள் மற்றும் தெருவிளக்குகளின் ஒளியை நோக்கி இந்தக் கொசுக்கள் பெருமளவில் திரண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாதாரண கொசுக்களிலிருந்து மாறுபட்ட தோற்றத்தைக் கொண்டிருப்பதாகவும், கூட்டமாகப் பறக்கும் இயல்புடையவை என்றும் அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், தேங்கிய நீர் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவை இவற்றின் பெருக்கத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இரவு நேரங்களில் வீடுகளில் உள்ள விளக்குகள், கடைகளின் முன்பகுதி மற்றும் தெருவிளக்குகளைச் சுற்றி இந்தக் கொசுக்கள் பெருமளவில் கூடுவதால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. சில பகுதிகளில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இதனால் பெரிதும் அச்சமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குன்னூர் அருகிலுள்ள சேலாஸ், கெந்தளா, காட்டேரி கிராமம், பாரதி நகர், கோலக்கம்பை மற்றும் துடூர் மட்டம் போன்ற பகுதிகளில் இந்தக் கொசுக்களின் தொல்லை மிக அதிகமாக உள்ளது; மக்கள் தங்கள் உணவை உட்கொள்ளக் கூட சிரமப்படும் அளவிற்கு இவை கூட்டமாக மொய்க்கின்றன.
மேலும், தேநீர் கடைகள் மற்றும் உணவகங்களில் உள்ள உணவுப் பொருட்கள் மீதும் இந்தக் கொசுக்கள் மொய்ப்பதால், அவை உண்பதற்குத் தகுதியற்றதாக மாறுகின்றன. முக்கியமாக இரவு நேரங்களில் தோன்றும் இந்தக் கொசுக்களைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் அச்சத்தைப் போக்கவும் சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட சுகாதார மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சேலாஸ் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, தடுப்பு நடவடிக்கையாகப் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்து வருகின்றனர். கோத்தகிரி, அரவேணு, கெட்டி-பலாடா, அருவங்காடு மற்றும் வெலிங்டன் போன்ற பகுதிகளிலும் இதே போன்ற சிறு வகை கொசுக்களின் தொல்லை மக்களிடத்தில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
கடை அடைப்புப் போராட்டம்
சேலாஸ் பகுதியில் சிறு வகை கொசுக்களால் ஏற்படும் தொல்லை அதிகரித்து வருவதால், இப்பிரச்சினை குறித்து அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை கடை அடைப்புப் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் ஆகியவை உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதைக் கண்டிக்கும் வகையில், உள்ளூர் வணிகர்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து இந்தப் போராட்டத்தின் முதற்கட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

