ஆவணித் திருவிழாவில் வரலாற்றுச் சிறப்பு நிகழ்வு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் ராஜகோபுரத்தில் அமைந்துள்ள, பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரமாண்ட பித்தளை மணி மீண்டும் ஒலிக்க உள்ளது.
137 அடி உயரம் கொண்ட 9 நிலை ராஜகோபுரத்தின் 9-வது நிலையில் அமைந்துள்ள இந்த மணி, வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்ந்த காலமான கி.பி. 18-ம் நூற்றாண்டில் வழங்கப்பட்டது. அப்போது தினமும் மதியம் 12 மணிக்கு நடைபெறும் உச்சிக்கால பூஜையின்போது இந்த மணி ஒலிக்கப்பட்டு வந்தது.
காலப்போக்கில் பல ஆண்டுகளாக இந்த மணி ஒலிக்காமல் இருந்த நிலையில், தற்போது ஆவணித் திருவிழாவை முன்னிட்டு மீண்டும் ஒலிக்கச் செய்ய கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மணியில் பொருத்தப்பட்டுள்ள கயிற்றை 3 பணியாளர்கள் இணைந்து இழுத்தால் மட்டுமே அதன் பிரமாண்ட ஒலி எழும். இதற்கான சோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
உச்சிக்கால பூஜை நடைபெறும் நேரத்தில் தொடர்ந்து 5 நிமிடங்கள் வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றுச் சின்னமான இந்த மணி ஒலிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
– 200 ஆண்டுகள் பழமையான பாரம்பரியம் மீண்டும் உயிர் பெறுகிறது!

