மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட புதுப்பதி மலைக் கிராமத்துக்குள் குட்டி யானை உட்பட 3 யானைகள் நேற்று புகுந்து உலா வந்தன. பின்னர் வாளையாறு ஆற்றில் குட்டியுடன் நீராடிவிட்டு மீண்டும் வனப்பகுதிக்குத் திரும்பின.

கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட சின்னம்பதி, முருகன்பதி, மோடம்பதி, புதுப்பதி ஆகிய கிராமங்களில் ஏராளமான விவசாயிகளும் பழங்குடியின மக்களும் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் அவ்வப்போது யானைகள் நடமாட்டம் இருப்பதுடன், ஆடுகள், நாய்களை வேட்டையாடும் சிறுத்தைகளின் நடமாட்டமும் இருப்பதால் பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், நேற்று காலை வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானைக் கூட்டம் ஒன்று புதுப்பதி கிராமத்துக்குள் நுழைந்தது. காலை 10.30 மணியளவில் குட்டி யானை உட்பட 3 யானைகள் கிராம வீதிகளிலும், காளியம்மன் கோயில் சுற்றுப்புறத்திலும் உலா வந்தன.
குட்டி யானையை பாதுகாப்பாக அழைத்துச் செல்லுமாறு கூறி, அப்பகுதி மக்கள் யானைகளை அன்புடன் வழிநடத்தினர். தொடர்ந்து கிராமத்தை விட்டு வெளியேறிய யானைகள், அருகிலுள்ள வாளையாறு ஆற்றுக்குச் சென்று குட்டியுடன் நீராடின.
சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு, மதியம் 12.30 மணியளவில் யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன. யாருக்கும் எந்தத் தொந்தரவும் ஏற்படுத்தாமல் யானைகள் கடந்து சென்றதால் கிராம மக்கள் நிம்மதியடைந்தனர். குறிப்பாக, தாய் யானையுடன் குட்டி யானை நடந்து சென்ற காட்சியை அப்பகுதி மக்கள் ரசித்தனர்.

