தாம்பரம் மாநகராட்சியில் அசோகா தூண் அமைக்கப்பட்ட விவகாரத்தில் மாநகராட்சி ஆணையர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதையும், மண்டல உதவிப் பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதையும் வரவேற்பதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

எனினும், அரசு வெளியிட்டுள்ள விளக்கத்தில் இந்த விவகாரம் வெறும் “செயல்முறை குறைபாடு” எனக் கூறப்பட்டிருப்பது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுவதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் எழுப்பியுள்ள கேள்விகள்:
மாமன்றக் கூட்டம் நடைபெற்றதா?
ஜூலை 14-ஆம் தேதி மாமன்றத்தில் பொருள் வைக்கப்பட்டு நிர்வாக அனுமதி பெறப்பட்டதாக அரசு விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஜூன் 11-ஆம் தேதிக்குப் பிறகு ஜூலை மாதத்தில் மாமன்றக் கூட்டம் நடைபெறவில்லை என்றும், அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 30-ஆம் தேதிதான் நடைபெற்றதாகத் தெரிகிறது என்றும் அறப்போர் இயக்கம் கூறியுள்ளது. எனவே, ஜூலை 14-ஆம் தேதி நிர்வாக அனுமதி எவ்வாறு பெறப்பட்டது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனக் கோரியுள்ளது.
CSR நிதியில் பணி செய்த நிறுவனம் எது?
ஜூலை 23-ஆம் தேதி டெண்டர் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஜூலை 24-ஆம் தேதி ஒரு நிறுவனம் CSR நிதியில் பணியை மேற்கொள்வதாக கடிதம் அளித்ததாக அரசு தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் எது? அதற்கான ஒப்புதல் எப்போது வழங்கப்பட்டது? என்பதையும் அரசு வெளியிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மூன்று நாள்களில் சிலை நிறுவப்பட்டது எப்படி?
ஜூலை 25-ஆம் தேதி ஒப்புதல் வழங்கப்பட்டதாகக் கொண்டாலும், அதன்பிறகு மூன்று நாள்களுக்குள் அசோகா தூண் சிலை தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டு, ஜூலை 29-ஆம் தேதி திறப்பு விழா நடைபெற்றது எவ்வாறு? என்றும் அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
CSR பங்களிப்பு செய்த நிறுவனத்தின் பெயர் ஏன் இல்லை?
CSR நிதியில் சிலை அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அந்த நிறுவனத்தின் பெயர் சிலையைச் சுற்றியோ அல்லது வேறு இடங்களிலோ இடம்பெறவில்லை. எனவே, அந்தப் பணியை மேற்கொண்ட நிறுவனம் எது, அதன் CSR பங்களிப்பு தொடர்பான ஆவணங்கள் என்ன என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
சிலை அமைத்த பிறகு டெண்டர் ஏன்?
சிலை நிறுவப்பட்ட பிறகும் டெண்டர் நடைமுறை தொடர்ந்தது ஏன் என்பது முக்கியக் கேள்வி என அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 6-ஆம் தேதி டெண்டர் கோரப்பட்டு, செப்டம்பர் 15-ஆம் தேதிதான் அது ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. டெண்டர் ரத்து உத்தரவில், செப்டம்பர் 24-ஆம் தேதி வரை ஒப்பந்ததாரர்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால், இந்த விவகாரத்தில் புகார் அளிக்கப்படாமல் இருந்திருந்தால் டெண்டர் மூலம் பணம் செலுத்தப்பட்டிருக்க வாய்ப்பிருந்ததா என்பதையும் விசாரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி ஆணை வழங்கப்படவில்லையா?
“பணி ஆணை வழங்கப்படவில்லை” என்ற முடிவுக்கு அரசு எதன் அடிப்படையில் வந்தது என்பதும் விளக்கப்பட வேண்டும் என அறப்போர் இயக்கம் கூறியுள்ளது.
பணி ஆணை உண்மையில் வழங்கப்படவில்லையா அல்லது புகாருக்குப் பின்னர் ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என்பதையெல்லாம் விரிவான விசாரணை மூலமே கண்டறிய முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
CSR கடிதத்தின் உண்மைத் தன்மை ஆய்வு செய்யப்படுமா?
CSR நிதியில் பணி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கடிதம் எப்போது பெறப்பட்டது, அது முறையாகப் பதிவு செய்யப்பட்டதா, அந்த நிறுவனமே உண்மையில் பணியை மேற்கொண்டதா என்பன தொடர்பான ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும் என இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
ஒரே பணிக்கு டெண்டர் ஏன்?
ஏற்கெனவே CSR நிதியில் பணி மேற்கொள்ளப்பட்டிருந்தால், அதன்பிறகு அதே பணிக்காக டெண்டர் விடப்பட்டதன் காரணம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.
சுமார் ரூ.45 லட்சம் மதிப்பிலான டெண்டர் தொடர்பாக இரட்டைச் செலவு அல்லது நிதி முறைகேடு ஏதேனும் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை தேவை என அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
“செயல்முறை குறைபாடு” என்று முடிக்கக் கூடாது
இந்த விவகாரத்தை வெறும் செயல்முறை குறைபாடு எனக் கூறி முடித்துவிடாமல், டெண்டர் நடைமுறை, CSR நிதி, நிர்வாக அனுமதி, பணி ஆணை, பணம் செலுத்தப்பட்டதா உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, விதிமீறல்கள் அல்லது முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த இயக்கம் கோரியுள்ளது.

