தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 2026-ஆம் ஆண்டில் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை 15,933 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளதால், அப்பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
டெங்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு பணிகளுக்காக மாநிலம் முழுவதும் 25,645 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 11,322 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான சிறப்பு வார்டுகள் மற்றும் தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, சுவாசப் பாதை தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் ஓய்வெடுக்கச் செய்ய வேண்டும்.
கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்லும்போது பொதுமக்கள் முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் ஏற்பட்டால், மருந்தகங்களில் சுயமாக மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதைத் தவிர்த்து, அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், காய்ச்சல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்

