சதுப்பு நிலங்கள் இயற்கை வழங்கிய பாதுகாப்பு அரண்கள் என்றும், அவற்றை ஆக்கிரமிப்புகள் மற்றும் அறிவியல் பூர்வமற்ற கட்டுமானங்களிலிருந்து பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
சதுப்பு நிலங்கள் மழைநீரை சேமித்து, வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்தும் இயற்கையான வடிகால்களாக செயல்படுகின்றன. மேலும், கடற்கரைப் பகுதிகளை புயல் சீற்றங்களில் இருந்து பாதுகாக்கும் இயற்கை அரணாகவும் விளங்குகின்றன.
ஆனால், சதுப்பு நிலங்களில் தடுப்புச் சுவர்கள், செயற்கைக் கரைகள் உள்ளிட்ட கட்டுமானங்கள் அமைப்பது நீரின் இயற்கையான ஓட்டத்தை தடுத்து, மழைக்காலங்களில் வெள்ள நீர் வெளியேற முடியாத சூழலை உருவாக்கும். இதனால் குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
மேலும், இதுபோன்ற கட்டுமானங்கள் நிலத்தடி நீர் மட்டத்தை பாதிப்பதுடன், சதுப்பு நிலங்களை சார்ந்து வாழும் அரிய வகை பறவைகள் மற்றும் உயிரினங்களின் வாழ்விடங்களையும் அழிக்கும்.
எனவே, சதுப்பு நிலப் பகுதிகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்கவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கட்டுமானங்களை தடுக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

