அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர நண்பனும் இல்லை என்பதைத் தமிழக அரசியல் களம் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியிருக்கிறது. சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் இல்லத் திருமண விழாவில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் நேருக்கு நேர் சந்தித்து, புன்னகையுடன் கைக்குலுக்கி நலம் விசாரித்துக் கொண்டது வெறும் “அரசியல் நாகரிகம்” தானா அல்லது திரைக்குப் பின்னால் ஏதோ ஒரு புதிய சமன்பாடு உருவாகிறதா என்ற விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, புதுச்சேரியில் நடைபெற்ற இயக்குநர் கௌதமன் மகள் திருமண விழாவிலும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மு.க.ஸ்டாலினும் அருகருகே அமர்ந்து கலகலப்பாகப் பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பின. இப்போது பாஜக மாநிலத் தலைவருடனான இந்தச் சந்திப்பு, வெறும் தற்செயல் நிகழ்வு எனத் கடந்துபோக முடியாத அளவுக்குப் பல அரசியல் உள்அர்த்தங்களைக் தாங்கி நிற்கிறது.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியல் சூழல் வெகுவாக மாறியுள்ளது. தொடர்ச்சியான தோல்விகள் மற்றும் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட கசப்புகளால் காங்கிரஸ் கட்சி திமுகவைக் கைகழுவத் தொடங்கிய சூழலில், திராவிட முன்னேற்றக் கழகம் தனித்துவிடப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டது.
தேசிய அரசியலில் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும், மாநில அளவில் வலுவானதொரு பாதுகாப்பை உருவாக்கவும் திமுகவுக்கு ஒரு சக்திவாய்ந்த தோழமை தேவையாக இருக்கிறது. இந்தச் சூழலில் தான், டெல்லி மேலிடத்துடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பதே தற்போதைய சூழலுக்குப் புத்திசாலித்தனம் என்ற முடிவுக்கு திமுக தலைமை வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதன் விளைவாகவே, தொகுதி மறுவரையறை போன்ற முக்கிய விவகாரங்களில் ஆரம்பத்தில் தீவிர எதிர்ப்பைப் பதிவுசெய்து வந்த திமுக, சமீபகாலமாகத் தனது கடுமையான நிலையைத் தளர்த்தி, மென்மையான அணுகுமுறையைக் கையாளத் தொடங்கியுள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளில் திமுக காட்டும் இந்த மறைமுக இணக்கம், பாஜகவை நோக்கி அது எடுத்து வைக்கும் தூதுச் சரடாய் பார்க்கப்படுகிறது.
மறுபுறம், தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்த முயலும் பாஜகவும், தேர்தல் கணிப்புகளை எதிர்கொள்ள ஏதேனும் ஒரு வலுவான திராவிடக் கட்சியின் ஆதரவு அவசியம் என்பதை உணர்ந்தே இருக்கிறது. நயினார் நாகேந்திரன் போன்ற மிதமான போக்கைக் கொண்ட ஒரு தலைவரின் தலைமையில், திமுகவுடன் ஒரு நல்உறவைப் பேணுவது இரு தரப்பிற்குமே சாதகமான அரசியல் சூழலை உருவாக்கும்.
அரசியல் மேடைகளில் மிகக் கடுமையான விமர்சனங்களை வீசிக்கொள்ளும் இரு தலைவர்களும், பொது நிகழ்வுகளில் எந்தவிதத் தயக்கமும் இன்றி கைகுலுக்கிக் கொள்வது ஒருபுறம் நாகரிகமாகத் தோன்றினாலும், இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் கணக்குகளைப் புறந்தள்ளிவிட முடியாது.
‘காங்கிரஸுக்கு விடை கொடுத்துவிட்டு பாஜகவுக்குக் கை கொடுக்க திமுக தயாராகிறதா?’ என்ற கேள்வி இப்போது அறிவாலயத்தின் சுவர்களையும் தாண்டி எதிரொலிக்கிறது. ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன் இடையிலான இந்தச் சந்திப்பு, தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கப் புள்ளியா அல்லது வழக்கமான சந்திப்பா என்பதை வரவிருக்கும் நாட்களே தீர்மானிக்கும்.

