ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரிய தீர்மானம், அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ‘டெட்’ (TET) தேர்வில் இருந்து ஒன்றிய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபையில், இன்று (ஆகஸ்ட் 25) தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை, பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கொண்டு வந்தார். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள், தீர்மானத்தை ஆதரித்தன.
இந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் (NCTE) 23.8.2010-ஆம் நாளில் தேதியிட்ட அறிவிப்பில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவதற்குரிய ஒரு தகுதியாக ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.
ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக, குறிப்பாக 15 முதல் 20 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித இடையூறும் இன்றி தங்களுடைய பணியை சிறப்பாக ஆற்றி வரும் நிலையில், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ல் ஆசிரியர் தகுதி தேர்ச்சி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பணியில் இருக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று 1.9.2025-ஆம் நாளிட்ட உரிமையியல் மேல்முறையீட்டு சிவில் அப்பீல் எண் 1405/2025, 1385/2025 மற்றும் 1386/2025-ல் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட உத்தரவினால் தமிழ்நாட்டில் சுமார் 3,28,701 அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பதவி உயர்வினை பெற இயலும். 15 முதல் 20 ஆண்டுகள் வரை தடையின்றி பணியாற்றி ஓய்வு பெறும் வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை தகுதி தேர்வு எழுத வலியுறுத்துவது, வற்புறுத்துவது அவர்களின் வாழ்வாதார உரிமையை பாதிக்கும் செயலாகும்.
எனவே, தமிழ்நாடு பள்ளிகளில் 23.8.2010-க்கு முன்பாக அன்றைய நடைமுறையில் இருந்த விதிமுறைகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு அவர்களின் நீண்டகால பணி அனுபவம் மற்றும் பணி பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஆசிரியர் தகுதி தேர்வு ‘டெட்’ட்டில் இருந்து முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. இவ்வாறு, தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

