கோவை, ஜூன் 13:
கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய எல்லையில், பொதுமக்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தவும் குற்றங்களை தடுக்கவும் “புட் பேட்ரோல்” (Foot Patrol) எனப்படும் நடை ரோந்து சேவை புதிய முயற்சியாகத் துவங்கப்பட்டுள்ளது. பேரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) சுரேஷ் இச்சேவையை நேற்று முறைப்படி துவக்கி வைத்தார்.
வழக்கமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து செல்லும் போது, குறுகலான பகுதிகள் அல்லது மக்கள் கூட்டத்தில் உள்ள சில நுணுக்கமான பிரச்சினைகளைக் கவனிப்பது கடினமாக இருக்கும்.
இத்திட்டத்தின் மூலம் போலீசார் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய சாலைச் சந்திப்புகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் நேரடியாக நடந்து சென்று, பொதுமக்களிடம் நண்பர்களைப் போல் பழகி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பார்கள்.
சேவை துவங்கிய முதல் நாளான நேற்று, மதுக்கரை நடராஜ் மருத்துவமனை சந்திப்பு, மதுக்கரை மார்க்கெட் மற்றும் போடிபாளையம் சாலை வழியாகப் பேரூர் டி.எஸ்.பி. சுரேஷ் தலைமையில், மதுக்கரை காவல் ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் மற்றும் காவலர்கள் தீவிர நடை ரோந்து மேற்கொண்டனர். அப்போது அப்பகுதி மக்களிடம் குறைகளையும், பாதுகாப்புச் சூழலையும் கேட்டறிந்தனர்.
இதுகுறித்து பேரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் கூறுகையில் “இந்த நடை ரோந்து சேவையானது இன்று முதல் தொடர்ச்சியாகப் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. வாகனங்களில் செல்லும்போது நமது கண்களில் படாமல் விடுபடும் பல விஷயங்கள், நேரடியாக நடந்து சென்று மக்களிடம் விசாரிக்கும் போது தெரியவர வாய்ப்புள்ளது. இது குற்றங்களைக் குறைக்கவும், மக்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் வெகுவாகப் பயன்படும்.”

