திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சேவூரில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சேவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய விவசாயிகள், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்வதாக அறிவித்ததாகவும், ஆனால் தற்போது ₹75 ஆயிரத்திற்குக் கீழ் உள்ள கடன்களுக்கு மட்டுமே தள்ளுபடி வழங்கப்படுவதாக வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.
இதனால் பெரும்பாலான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்கள், வாக்குறுதியின்படி அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சேவூர் பகுதியைச் சேர்ந்த ஆலத்தூர் ஏ.ஆர். சுப்பிரமணியம், ஆறுமுகம், குணசேகரன், ராஜேந்திரன், மௌனசாமி, கிருஷ்ணசாமி, பாப்பாங்குளம் ஏ. ராமசாமி, கருமாபாளையம் பழனிசாமி உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஏ.ஆர். கந்தசாமி, கே. சாமிநாதன், எ. ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள் வி. கோபால், ஆர். ஷாஜகான், அர்ஜுனன், ரமேஷ், ஏ.எல். ராமச்சந்திரன், சேக்ஸ்பியர், சேவூர் முத்துசாமி உள்ளிட்டோரும், சிபிஎம் சார்பில் போத்தம்பாளையம் நடராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் வி. கோபால், ஆர். ஷாஜகான், ஏ.ஆர். கந்தசாமி ஆகியோர் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.
இதேபோல், பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பும் தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் வி. கோபால், ஏ.ஜி. சண்முகம், விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த கே. சாமிநாதன், ஆர். ரங்கசாமி, எஸ். மாணிக்கம், பாலசுந்தரம் மற்றும் சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ரகுநாதன், மணி, நவக்குமார், பச்சம்பாளையம் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கலாச்சாரத்தை தடுக்க வேண்டும், ஒன்றிய அரசின் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் சேவூர் சந்தை மைதானத்தில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சேக்ஸ்பியர் தலைமை தாங்கினார்.

