தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், ஜூலை 2027-ல் நடைபெற உள்ள அகில இந்திய தொழிற்தேர்வில் (AITT) தனித்தேர்வர்களாக பங்கேற்க விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான முதன்மைத் தேர்வு நவம்பர் 2026-ல் நடைபெற உள்ளது. ITI பயிற்சி முடித்த முன்னாள் பயிற்சியாளர்கள், COE NTC தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் குறிப்பிட்ட தொழில் அனுபவம் பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதி பெற்றவர்கள்:
ITI-ல் பயின்று தேர்ச்சி பெற்று, தொடர்புடைய Allied தொழிற்பிரிவில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். COE NTC தேர்ச்சி பெற்று, சம்பந்தப்பட்ட பிரிவில் ஓராண்டு பணி அனுபவம் உள்ளவர்களும் தகுதி பெறுவர்.
மேலும், ஆகஸ்ட் 2018-க்கு முன்பு SCVT சேர்க்கை பெற்று சான்றிதழ் பெற்றவர்கள் முதன்மைத் தேர்வு இன்றி நேரடியாக அகில இந்திய தொழிற்தேர்வில் பங்கேற்கலாம்.
01.09.2026 அன்று 21 வயது நிறைவடைந்தவர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சாலை அல்லது அரசு/உள்ளாட்சி அமைப்புகளில் பதிவுபெற்ற நிறுவனங்களில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2019 முதல் SCVT சேர்க்கை பெற்று சான்றிதழ் பெற்றவர்களும் 3 ஆண்டுகள் பணி அனுபவத்துடன் நேரடியாக தேர்வு எழுதலாம்.
தேர்வு விவரம்:
எழுத்துத் தேர்வு (Theory) 26.11.2026-ம் தேதி கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திலும், செய்முறைத் தேர்வு (Practical) 27.11.2026-ம் தேதியும் நடைபெறும்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 09.10.2026 ஆகும்.
விண்ணப்பப் படிவத்தை www.skilltraining.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக் கட்டணமாக ரூ.200-ஐ www.karuvoolam.tn.gov.in இணையதளம் மூலம் e-Challan வழியாக செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், கட்டண ரசீது மற்றும் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து, குறிப்பிட்ட மாவட்ட Nodal அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களிடம் கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.

