ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் சுங்க வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அதிகாரம் அளிக்கும் புதிய சட்டத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
‘லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026’ என்ற பெயரிலான இந்த மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
இந்த சட்டத்தின் மூலம், ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 0 முதல் 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கும் அதிகாரம் அமெரிக்க நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போருக்கு ரஷ்யா நிதி திரட்டுவதை கட்டுப்படுத்தவும், ரஷ்யாவின் எரிசக்தித் துறை மற்றும் ‘நிழல் கப்பல் படை’ நடவடிக்கைகளை பாதிக்கும் வகையிலும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் அமலுக்கு வந்த 30 நாட்களுக்குள் வரி தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க அதிபருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தேசிய பாதுகாப்பு மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தைகளை கருத்தில் கொண்டு சில நாடுகளுக்கு விதிவிலக்கு வழங்கும் அதிகாரமும் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியா தெரிவித்துள்ள நிலைப்பாட்டில், “140 கோடி மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதே இந்தியாவின் முக்கிய நோக்கம். உலக சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே எரிசக்தி இறக்குமதி முடிவுகள் எடுக்கப்படுகின்றன” என கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா–இந்தியா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், புதிய சட்டம் சர்வதேச வர்த்தகத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

