தமிழகத்தின் 2026-2027 நிதியாண்டுக்கான சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மானியக் கோரிக்கையில், குழந்தைகள், பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் திருநர்களின் நலனுக்காக பல்வேறு புதிய திட்டங்களை அமைச்சர் திருமதி கு. ஜெகதீஸ்வரி அறிவித்தார்.
300 புதிய அங்கன்வாடி கட்டடங்கள்
நகர்ப்புறங்களில் குழந்தைகளுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கும் வகையில் ரூ.51 கோடி செலவில் 300 புதிய குழந்தை மையக் கட்டடங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1,662 அங்கன்வாடி மையங்களில் உள்ள கல்நார் கூரைகள் ரூ.66.48 கோடி செலவில் அகற்றப்பட்டு, பாதுகாப்பான பி.யு.எஃப். பேனல் கூரைகளாக மாற்றப்படும்.
சொந்தக் கட்டடங்களில் இயங்கும் குழந்தை மையங்களின் பழுதுகளைச் சீரமைக்க ரூ.12.96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான நவீன கல்வி வசதிகள்
மலைப்பகுதிகளில் உள்ள 100 குழந்தை மையங்கள், எல்.இ.டி தொலைக்காட்சி மற்றும் இணைய வசதிகளுடன் தலா ரூ.1 லட்சம் செலவில் மாதிரி மையங்களாக மாற்றப்படும்.
மேலும், 50 வட்டாரங்களில் உள்ள 1.04 லட்சம் குழந்தைகளுக்கு ரூ.5.20 கோடி செலவில் வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் கற்றல் உபகரணங்களும், 2.70 லட்சம் குழந்தைகளுக்கு ரூ.6.23 கோடி செலவில் பயிற்சி புத்தகங்களும் வழங்கப்படும்.
2 முதல் 5 வயது குழந்தைகளுக்காக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் சார்ந்த கல்வி காணொளிகள் ரூ.60 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
மாணவர்களுக்கு ஊட்டச்சத்து திட்டம்
12 மாவட்டங்களில் உள்ள 5,502 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 4.42 லட்சம் மாணவர்களுக்கு இரத்த சோகையைத் தடுக்கும் வகையில் ரூ.38 கோடி செலவில் பொட்டுக்கடலை, நிலக்கடலை, எள்ளுருண்டை உள்ளிட்ட ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படும்.
நகர்ப்புற பள்ளிகளில் உள்ள 123 சத்துணவு மையங்களுக்கு ரூ.11.11 கோடி செலவில் வைப்பறையுடன் கூடிய புதிய சமையலறைகள் அமைக்கப்படும்.
குழந்தைகள் பாதுகாப்புக்கு புதிய நடவடிக்கைகள்
குழந்தைகள் மற்றும் இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மீட்டு மறுவாழ்வு அளிக்க மாநில அளவில் ரூ.3.80 கோடி செலவில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விரைவான நீதி மற்றும் மறுவாழ்வு கிடைக்க POCSO Portal 2.0 உருவாக்கப்படும்.
குழந்தைகள் உதவி எண் 1098 மையத்திற்கு ரூ.41 லட்சம் செலவில் புதிய செயலி மற்றும் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
பெண்கள், முதியோர் நலனுக்கு முக்கியத்துவம்
நகர்ப்புற பெண்களின் பொருளாதார பங்களிப்பை அதிகரிப்பதற்கான வழிகளை ஆய்வு செய்ய மாநில அளவிலான ஆய்வு மேற்கொள்ளப்படும்.
மூத்த குடிமக்களுக்காக பொது-தனியார் பங்களிப்பு (PPP) முறையில் ரூ.14.50 கோடி செலவில் நவீன ஓய்வுக்கால குடியிருப்பு அமைக்கப்படும்.முதியோர் இல்லங்களில் இயன்முறை சிகிச்சை வழங்க ஆண்டுக்கு ரூ.5.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் மூத்த குடிமக்களுக்கு ஒரே இடத்தில் சேவை வழங்க ரூ.2 கோடி செலவில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்படும்.
திருநர் நலனுக்கான புதிய திட்டங்கள்
திருநர்களுக்கான அரசு நலத்திட்டங்கள் மற்றும் ஆவணங்களை எளிதில் பெற ரூ.15 லட்சம் செலவில் ஒற்றைச் சாளர இணையதளம் உருவாக்கப்படும்.
7 மாவட்டங்களில் உள்ள அரண் இல்லங்கள் மூலம் ரூ.16.8 லட்சம் செலவில் ஆலோசனை சேவைகள் வழங்கப்படும்.
மேலும், திருநர்களின் உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அனைத்து வட்டங்களிலும் வட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்படும்.
மொத்தத்தில், குழந்தைகள் பாதுகாப்பு, ஊட்டச்சத்து, பெண்கள் முன்னேற்றம், முதியோர் நலம் மற்றும் திருநர் நலனை மையமாகக் கொண்டு 2026-27 நிதியாண்டில் சமூக நலத்துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

