தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமிக்க தகுதியான நபர்களைத் தேர்வு செய்வதற்காக 7 பேர் கொண்ட புதிய மாநிலக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை சட்டப் பிரிவு 46 (iii)-இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள, ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ள திருக்கோயில்களுக்கு அறங்காவலர்களைத் தேர்வு செய்வதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே செயல்பட்டு வந்த மாநிலக் குழுவின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை ஆணையரின் பரிந்துரையை ஏற்று புதிய மாநிலக் குழுவை அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய மாநிலக் குழுவின் தலைவராக மயிலம் பொம்மபுரம் ஆதீனத்தைச் சேர்ந்த தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி (ஓய்வு) டாக்டர் கே. இராமநாதன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருமதி அர்ச்சனா கல்பாத்தி அகோரம், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ப.ரா. சம்பத், திருமதி மா. சுமதி (எ) சுமதிஸ்ரீ, டாக்டர் த. வேல்முருகன் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பதவி வழி உறுப்பினர் மற்றும் குழுவின் செயலராகச் செயல்படுவார்.
ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ள முக்கிய திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களாக நியமிக்கக் கோரி பெறப்படும் விண்ணப்பங்களை இந்தக் குழு பரிசீலிக்கும்.
தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்து பெயர்ப் பட்டியலைத் தயாரித்து அரசுக்குப் பரிந்துரை செய்யும். அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர்.
இதற்கான அரசாணையை ஆளுநரின் உத்தரவுப்படி அரசுச் செயலர் ஜெ. குமரகுருபரன் பிறப்பித்துள்ளார்.


