சைபர் குற்றவாளிகளின் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்பட்ட ‘மணி மியூல்’ (Money Mule) வங்கி கணக்குகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் சைபர் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையில், 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சைபர் மோசடியில் ஈடுபடும் கும்பல்கள், தங்களது சொந்த வங்கி கணக்குகளை பயன்படுத்தாமல், பொதுமக்கள் மற்றும் ஏழை எளிய மக்களின் வங்கி கணக்குகளை கமிஷன் ஆசை காட்டி வாடகைக்கு பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இந்த முறையே ‘மணி மியூல் மோசடி’ என அழைக்கப்படுகிறது.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான வங்கி கணக்குகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டன.

மேலும், மோசடிக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஏராளமான மொபைல் போன்கள், சிம் கார்டுகள், ஏடிஎம் கார்டுகள் மற்றும் வங்கி காசோலை புத்தகங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

‘மணி மியூல்’ மோசடி எப்படி நடக்கிறது?

* மாதம் குறிப்பிட்ட தொகை பணம் தருவதாகக் கூறி, வங்கி கணக்கை பயன்படுத்த அனுமதிக்குமாறு ஆசை வார்த்தை கூறுகின்றனர்.

* ஆன்லைன் கடன் செயலி மோசடி, பகுதி நேர வேலை மோசடி, கிரிப்டோ முதலீட்டு மோசடி உள்ளிட்டவற்றில் பொதுமக்களிடம் இருந்து பறிக்கப்படும் பணம் இந்த கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது.

* பின்னர் அந்த பணத்தை குற்றவாளிகள் ரொக்கமாகவோ அல்லது வேறு வழிகளிலோ மாற்றிக் கொள்கின்றனர்.

பணம் கிடைக்கும் என்ற ஆசையில் சொந்த வங்கி கணக்கு, ஏடிஎம் கார்டு, யுபிஐ விவரங்களை மற்றவர்களுக்கு வழங்குவது சட்டப்படி கடுமையான குற்றம் என சைபர் குற்றப்பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்.

மோசடி பணம் தங்களது கணக்கில் வந்தால், அந்த கணக்கின் உரிமையாளர்களும் குற்ற வழக்கில் சிக்கி கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 1930 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும் அல்லது cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

o

Author

Share.
Leave A Reply

Exit mobile version