ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த முடிவு தொடர்பான அரசியலமைப்பு விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ளன.
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி, மத்திய அரசு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி, அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக
பிரித்தது. இந்த நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா என்ற முக்கியமான அரசியலமைப்பு கேள்வி உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணையின்போது, ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு, மாநிலத்தைப் பிரிக்கும் அதிகாரம் தொடர்பான கேள்விக்கு உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்காமல் இருந்தது.
ஆனால், “விரைவில் மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும்” என்ற உறுதி எப்போது நடைமுறைக்கு வரும்? என்ற கேள்வி தொடர்ந்து அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் விவாதமாக இருந்து வருகிறது.
ஒரு மாநிலத்தின் அந்தஸ்தை குறைத்து யூனியன் பிரதேசமாக மாற்றும் அதிகாரம் தொடர்பான அரசியலமைப்பு விளக்கம் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படாத நிலையில், அந்த விவகாரம் இந்திய கூட்டாட்சி அமைப்பில் முக்கியமான கேள்வியாகவே நீடிக்கிறது.
இவ்வாறு பா.சிதம்பரம் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


